குணா என்பது அவன் பெயராக அவன் நினைவில் அழுந்தி உட்கார்ந்த போது தான் வளர்த்த கோழிக்குஞ்சுகளுக்கும் பெயரிடுபவனாய் இருந்தான். மஞ்சு, சின்ன மஞ்சு, பாப்பாத்தி இப்படியாக பெயரிட்டு அழைத்து வந்தான் தன் கோழிக்குஞ்சுகளை. ஒரு சாயுங்காலம் விலகிய சிம்னி சிணுங்கும் பொழுதில் அம்மாவின் புருஷன் வந்தான். வந்ததும் குணாவின் முதுகில் உதை விழுந்தது.
உதையில் குப்புற சுருண்டு விழுந்த குணாவுக்கு வாயில் உப்புக்கரித்தது.. சிம்னி ஒளியில் தன் முன் கொஞ்சம் ரத்தம் சிந்திக்கிடப்பது தெரிந்தது.
"என்னன்னு சொல்லிட்டு எம்மவனை அடிய்யா." அவளின் ஓங்காரத்து மேற்படியான உதைகளுக்கிடையில் சொல்லப்பட்டது:
"என்ன தைரியம் இருந்தா என்ர மவளுக்கு முத்தம் கொடுத்துட்டு ஓடிவந்திருப்பான் இந்த எச்சைப் பொறுக்கி.."
"ஏந் அவ இவன் தங்கச்சி மாதிரியெல்ல..." என்று முடிக்கும் முன்னே அடிவாங்கி சாய்ந்தாள்..
பொணங்கடி நீங்க என்ற அழுத்தமான முடிவுச் சொல்லோடு வெளியேறினான் அடித்தவன்.
"ஏலே நீ அந்த மஞ்சு கூட விளையாண்டியாடா? சொல்லுடா.. என்னடா பண்ணுன அவள???" என்ற அம்மா குணாவை அப்போதுதான் பார்த்தாள்.. வாயோரம் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.. அவள் பதறி அலறும் முன்,
"...எனக்கு இந்த கோழி வறுத்து கொடு" என்று எந்த முகச்சலனமும் அவன் பக்கத்தில் வந்த கோழிக்குஞ்சின் கழுத்தைத் திருகி அவளிடம் நீட்டினான். கதறி உயிர் விட்ட பறவையின் பெயர் மஞ்சு என்பதாகயிருந்தது.
2:
குணா தாயின் முகத்தைக் கொண்டிருந்தான். சக்களத்தி வாழ்வை முடித்து தறிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள் குணா அம்மா. ஒண்ணும் வித்தியாசமில்லை என்பான் குணா. ஏழாம் வகுப்பு முடித்துவிட்டு ரெண்டு வருடம் சும்மாவே ஊரைச் சுத்திக் கொண்டிருந்தான்.. அப்புறம் கொஞ்சநாள் வடக்குத் தோட்டத்தில் வேலைக்குப் போனான். ஆட்டு மந்தையை விரட்டிக் கொண்டு காடுகாடாகச் சுற்றியலைந்து விட்டு வருவான். பக்கத்துத் தோட்ட மயிலாத்தா சிலசமயம் இவனை முகுது தேய்த்து விடப் பிடித்துக் கொள்வாள்.. பூவரசம் பூத்த மரநிழலில்.. பண்ணைத் தொட்டியில் நீரள்ளி முகுதுத் தேய்த்து விடுவான்.
ஒரு சமயம் கடுப்பெடுத்தவனாய்.. அவளின் பளபளமுதுகை நன்றாகப் பிராண்டி வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டான்.
ஆடுகளை அம்போவென்று விட்டுவிட்டு வந்ததாக சொல்லி தோட்ட வேலையிலிருந்து நீக்கப்பட்டான். அம்மா விளக்குமாறை எடுத்துக் கொண்டு வரும்போது..
"மூடிக்கிட்டு கெடடி" என்று ஒரே வார்த்தையால் அடக்கி விட்டான்..
நிலா பிறைக் கவிழ்த்து கிடந்த நேரம்... பக்கத்திலுள்ள அணையில் சென்று மல்லாக்க படுத்துக் கொண்டான்... வயிறு பசித்தது. நகங்களை பார்த்தான்.. மயிலாத்தாவின் முகுதுச் சதைத்துணுக்குகளும் காய்ந்த ரத்தமும் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது. ஆழமாக முகர்ந்து பார்த்துக் கொண்டான்.
அணைக்கு கீழுள்ள ஊற்று டீஸல் இன்ஜினை தறிப்பட்டறை எழில் இயக்க ஆரம்பித்திருந்தார். ஸ்டார்டர் சுழற்றி சோக்கை தள்ளிவிட்டதும்.. துடிக்க ஆரம்பித்தது இன்ஜின்.
எழுந்து கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு மயிலாத்தா வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.
3.
தறிக்கு போகிறேன் என்ற எணத்தை குணாவின் அம்மாவால் தடுக்க முடியவில்லை.. கண்டபடிக்கு அவளைத் திட்டுவதோடு அல்லாமல் அடிக்கவும் ஆரம்பித்திருந்தான். பீடிக்கும், சரக்கும் காசு பற்றாமல் அவள் பணத்தை பிடுங்கிக் கொள்ளவான். இல்லாவிட்டால் மயிலாத்தா, கீதா டீச்சர் அல்லது தெற்கு வளவு சரசா இப்படி யாரோ ஒருவரிடம் காசு வாங்கிக் கொள்கிற உரிமை கொண்டிருந்தான்.
நண்பர்கள்,
"ஏலே.. ஒம்முகத்துக்கு நீ போற ஆளுகளடா அவுளுக... என்னடா உன் டேஸ்ட்.. அதுவும் அந்த டீச்சருக்கிட்ட..??"
என்று அரற்றுவார்கள். அப்போதுஇன்று இன்றிரவு டீச்சர் வீடுதான் என்று முடிவு செய்து கொள்வான்.
தறிக்கு சென்ற கொஞ்ச நாட்களிலேயே ரஞ்சிதம் சுற்றி வர ஆரம்பித்தாள்.. ஒருநாள் இரவு பெளணர்மி வெளிச்சத்தில்
அவளைக் ஊர் தண்ணித் தொட்டி உச்சிக்கு கூட்டிச் சென்றான். சிலுசிலுவென்ற தளத்தில் வெட்கம் களைந்து கலவ ஆரம்பித்த நேரம்.. கேட்-வால்வை மூடவோ திறக்கவோ வந்தவன் இவர்கள் மேலிருப்பது தெரிந்து கொண்டான்.. அமைதியாகப் போய் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
"மரியாதையா கீழ இறங்கி வாடா......... மவனே" என்பதற்கு கோபம் வந்தவனாய், தொட்டியிலிருந்து நின்றவாறே.. கூட்டத்தின் மேல் ஒண்ணுக்கடித்தான். கீழிருந்து வந்த கற்களுக்காக இருவரும் கீழிறங்கி வரவேண்டியதாயிற்று.
இறங்கியதும் குணாவை கீழே போட்டு மிதித்தார்கள். ரஞ்சிதத்தை ஊர்பெருசுகள் தனியாக ஒதுக்கி அடித்தார்கள். தன்னை யாரெல்லாம் தீவிரமாக அடிக்கிறார்கள் என்று உன்னித்துப் பார்த்தான் குணா.. டீக்கடை வேலு, மயிலாத்தா புருஷன், டேவிட்டு, சைக்கிள் கடை பரமு, டீச்சர் புருஷன் அப்புறம் தனியார் பஸ் கண்டக்டராக இருக்கும் கதிரு. டேவிட்டும், கதிரும் மட்டுமே சம்பந்தமில்லாமல் தன்னை அடிப்பதாகத் தோன்றியது.
சப்.. சப்.. சப்.. என்று தெளிவாக முதுகில், கன்னத்தில், இடுப்பில் விழுந்தன.. எச்சரிக்கையாக குப்புறக் கவிழ்ந்து படுத்துக் கொண்டான் - அசல் புருஷன்கள் மேல் உள்ள பயத்தில்! அதிகாலை 1 மணிக்கு ஊரில் நில்லாமல் கடக்கும் அரசுப் பேருந்து அன்று மட்டும் கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போகும் போது, பஸ்ஸில் இருந்து வந்த ஒரு குரல்.. "யாராவது திருட்டுப் பயலா இருக்கும்" என்றது.
4.
சில நாட்களில் தறிவேலை விட்டு நின்றதும், கையில் கொஞ்சம் காசு கொடுத்தார்கள்.. நண்பர்களை அழைத்து டவுன் சினிமாவுக்கு போகலாம் என்றான். முன்மாதிரி யாரும் இவனுடன் பழக விருப்பமில்லாதவர்களாய் மறுத்துவிட்டார்கள்.
விறுவிறுவென்று டேவிட் வீட்டுப் பக்கம் சென்றான். டேவிட் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியன். சைக்கிளில் சுற்றியலைந்து கொண்டிருப்பான். எப்பவும் பாக்கெட்டில் காய்ச்சல், தலைவலி மருந்துகள், நிரோத் பாக்கெட்கள் கணிசமாக வைத்திருப்பான்.
அப்போது காலை பதினொன்றரை மணியிருக்கும். புளியமரங்கள் அடர்ந்த சரிவான மண்சாலையில் வேகமாக இறங்கி, சர்ச் தாண்டிய, டேவிட் வீட்டு முன் நின்றான். சிறிய வீடு. கதவு சாத்தியிருந்தது. டேவிட் மனைவி எப்படியிருப்பாள் என்று பார்த்ததில்லை.
"வீட்டில யாருங்க" என்ற குரலுக்கு கதவவைத் திறந்து நின்றாள் டேவிட் மனைவி. பார்த்ததும் காட்டுச்செடி போல ஒரு பயம் குணாவின் மனதில் படர்ந்தது. இந்த உணர்வு தனக்கு புதிது என்பதாகத் தோன்றியது.
"குணாவா? என்ன விஷயம்?" என்றாள் இயல்பாக... வியப்பாக இருந்தது.. நம்மை தெரிந்து வைத்திருக்கிறாளா என்று. இந்த ஊரில் கேட்காத இனிமையான குரலாக இருந்தது. கையில் சோப்பு நுரையிருந்தது. துவைத்துக் கொண்டிருப்பாள் போலும்.
எதுவும் சொல்லாமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து சிரித்தவளாய்,
"என்ன வேணும்?" என்றாள்.. அவளின் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்.. படக்கென்று அவள் பக்கம் சென்றான்..
"தண்ணி கொடு" என்றான். கொண்டு வந்து கொடுத்தாள். சொட்டுவிடாமல் குடித்துவிட்டு,
"சினிமாவுக்கு போலாம் வர்றியா?" என்றான் வறட்சியான குரலில். அவளோ கொஞ்சமும் சிரிப்பு மாறாமல், "இல்லே வரலே. நீ போயிட்டு வா" என்று திரும்பி வீட்டுக்குள் நடந்தாள்.
அவளின் பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்... அவள் பின்புறமாகச் சென்று தோளைத் தொட்டான். திரும்பியவளைப் பிடித்து இழுத்து அழுத்தமாக உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான். கையில் சொம்பைத் திணித்து விட்டு நடந்தான். திகைத்துப் போய் நின்றிருந்தாள் டேவிட்டின் மனைவி. வரும்வழியில் சர்ச்சில் உள்ள கடிகாரம் பன்னிரண்டு முறை அடித்து அமைதியானது. மனசு ஏனோ படபடவென்றிருந்தது.
5.
தனியாக சினிமாவுக்குப் போய்விட்டு, இரவு பன்னிரண்டு மணியளவில் டீச்சர் வீட்டு கொல்லைப்புறமாக உள் நுழைந்தான்..
வயிறு பசித்திருந்தது. கொல்லையிலுள்ள கிணற்றடியில் உட்கார்ந்தவனாய், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.. சில நிமிடங்களில், பின் பக்கக் கதவு திறந்து கொண்டு டீச்சர் வெளிப்பட்டாள்..
"உள்ள வா.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்..
திரும்பிக் கூடப் பார்க்காமல் புகைத்துக் கொண்டிருந்தான்.. கிணற்றுப் பக்கம் வந்தவள், குணாவின் முகத்தைப் பிடித்துத் திருப்பி, தலையைக் கோதி விட்டாள்,
"என்னடா? என் ராஜாவுக்கு என்ன ஆச்சு??" என்றாள் கிசுகிசுப்பாய்.. அவளின் முகத்தைப் பார்த்தான். சிகரெட்டை கீழேப் போட்டு அணைத்தான். அவனை இழுத்து உதடுகளில் முத்தமிட்டாள்.. ஏதோ நினைவு வந்தவன் போல சட்டென்று விலகி இறங்கி நடக்கலானான். குணா சுவரைத் தாண்டி இந்தப் பக்கம் குதித்த போது, அவன் முன் கொல்லையிலிருந்து அணைந்த சிகரெட் துண்டு வந்து விழுந்தது. அவன் குடித்தது.
6.
சர்ச் பக்கமுள்ள நாய்கள் எப்படி என்று தெரியவில்லை.. இருந்தும் துணிந்து புளியமரங்கள் அடர்ந்த சரிவில் இறங்கினான்.
இதோ இப்ப வீடு வந்துவிடும்.. சுலபமாக உள் நுழைந்துவிடலாம்.. எந்த பிரச்சினையும் வராது என்பதாக பூனை போல முன்னேறினான். பின்பக்கம் நுழைவதே சரி என்றும் நினைத்துக் கொண்டான். எதற்கு போகிறோம் என்ற எண்ணம் அற்றவனாயிருந்தான்.
ஜன்னல் வழியாக பார்த்தான்.. சன்னமான வெளிச்சத்தில் இரண்டு கரிய உருவங்கள் கட்டிலில் கிடப்பது தெரிந்தது. கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். சுவாசிக்க திணறலாக இருந்தது. திரும்பி சுவரில் சாய்ந்து கொண்டான். சர்ச் முகட்டிலிருந்த சிலுவை தனிமையாய் துலங்கியது. அப்படியே அதையே பார்த்துக் கொண்டிருந்தான். தோளில் ஒரு தொடுகையை உணர்ந்தான். பயந்து திரும்பிப் பார்த்தான்.. அவள் நின்றிருந்தாள்..
"இங்க என்ன பண்றே" குரல் உடைந்து வசீகரமற்று மெல்லியதாய் இழைந்தது.
எதுவும் பேசாமல் சிலுவையைப் பார்த்துக் கொண்டான்.
"என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்க மனசுலே.........? மரியாதையா போயிடு....."
"....."
"கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. போயிடு.." என்ற குரல் கம்மியிருந்தது.
திரும்பி அவளைப் பார்த்தான்.. ஜன்னலிருந்து வீழ்ந்த சிறு வெளிச்சம் அவள் கண்களின் ஒட்டியிருந்த நீர்ப்படலத்தில் மினுங்கியது. டேவிட்டின் குறட்டை மெலிதாக கேட்டுக் கொண்டிருந்தது.
அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.. நேரம் கழிவது உணர முடியாதாய் இருந்தது. மனதுள் ஏனோ பயமாய் இருந்தது. அமைதியாய் அவள் வீட்டை விட்டு வெளியேறினான்.
7.
இரவு இன்னும் மிச்சமிருந்தது.. திரும்ப நடக்கையில் அவள் நீண்ட நேரம் தன் முதுகையே வெறித்துக் கொண்ருப்பதாக உணர்ந்தான். அம்மா முதல் எல்லா பெண்களும் நினைவில் வந்தார்கள்.. ஏனோ அவன் அம்மா மேல் ஒரு வாஞ்சனையை இப்போது உணர்ந்தான். மனதுள் புதிதாக ஒரு வெறுமை, இது வேண்டாம் என்பதாக அவனை வற்புறுத்தியது. சர்ச்சின் கேட்டைத் தாண்டி உள்ளிருக்கும் புளியமரத்தில் தூக்கு மாட்டிச் செத்துப் போவதென முடிவெடுத்தான். புளிமரத்தடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து ஒரு சிகரெட் பிடித்தான்.
அண்ணாந்து தனிமையான சிலுவையைப் பார்த்தான். பக்கத்திலுள்ள டேவிட் வீட்டு ஜன்னல் பக்கம் அவள் இப்போது அங்கு இல்லை. இங்கு வேண்டாம் என்று தோன்றியவனாக.. சர்ச்சை விட்டு வெளியேறினான்.
சரிவில் மேலேறும் போது காணக்கிடைத்த இரண்டாவது புளியமரம் ஏறச் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. சிகரெட்டை அணைத்து விட்டு மரமேறினான். கைலியை கிழித்து கயிறாக்கி கழுத்தில் மாட்டிக் கொண்டான்.. கைலி புதுசு அறுந்திடாது என்று நம்பினான்... இன்னொரு முனையை இறுகக் கிளையில் கட்டிவிட்டு மெதுவாக கீழே இறங்கித் தொங்கி ஊசலாடினான் குணா. அப்போது, அவள் பேர் என்னவாயிருக்கும் என்பதே அவன் கடைசி நினைவாக இருந்தது!
கொஞ்ச நிமிடங்களில் அந்த பக்கத்து ரோட்டில் விர்ரென்று விரைந்து கடந்தது 1 மணி பேருந்து - நில்லாமல்.