Thursday, July 9, 2009

கண்ணுக்குத்​தெரியாத கற்கள்

தருமபுரியில் கல்லூரி படித்துக்​கொண்டிருக்கும்போது தான் முதல் கல் கண்டுபிடிக்கப்பட்டது..என் சிறுநீரகத்தில்.

ஒரு கல்லின் பயணம் சிறுநீரகத்தில் ஆரம்பித்து சிறுநீரக குழாய் வழியாக பிளாடர் வந்து சேரும். உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் கல்லின் அளவைப் பொறுத்து அது சிறுநீரோடு கரைந்து வெளியேறிவிடும்.

வயிறு விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. அப்போது அது கல் என்றே தெரியவில்லை எனக்கு. டாக்டருக்கும். நிர்மல் தான் அந்த டாக்டரை அறிமுகம் செய்து வைத்தான்.

டாக்டர் சுறுசுறுப்பானவர். இனிமையாக பழகக்கூடியவர். பேசும் போதே புத்திசாலி என்பதை உணர்த்திவிடுவார். ஆனால் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்டாக இருந்த அவரிடம், என்னை எதற்கு நிர்மல் இட்டுச் சென்றான் என்றுதான் புரியவில்லை. ஒரு வேளை வயிற்று வலி என்று சொல்லி அடிக்கடி காலேஜுக்கு மட்டம் போடுவதாக நினைத்திருப்பானோ?

பரிசோதித்த பின் டாக்டர் சொன்னது:
"வயிற்று வலி வித் லூஸ்மோஷன் இருக்கிறதால ஸ்டிரிக்ட் டயட் முக்கியம். அனேகமா சீதபேதியா இருக்கலாம்"

பிரட், பழங்கள், தயிர்சாதம், பருப்பு சாதம் இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். தருமபுரியில் எனக்குத்​தெரிந்து ஹோட்டல்களில் இந்த மாதிரி பத்தியச் சாப்பாடு (ஸிக் மீல்ஸ்) கிடைப்பதில்லை. அப்போது கொம்சாம்பட்டியில் (குமாரசாமி பேட்டை) நண்பர்களுடன் அறையில் தங்கியிருந்ததால் கொஞ்சம் போல சமைக்க ஆரம்பித்தோம். இருந்தும் பத்தியம் அசாத்தியமாகவே இருந்தது.

சாத்துக்குடி என்பது ஆரஞ்சு மாதிரி இருந்தாலும், சாத்துக்குடி என்று ​கேட்டால்தான் சாத்துக்குடி கிடைக்கும் என்ற தத்துவம் அப்போதுதான் விளங்கியது. வாழ்க்கையிலேயே அப்போதுதான் முதன்முறையாக ஒரு தத்துவத்தை தோலை உறித்து முழுங்கியது போலிருந்தது.

ஒரு மாதமாகியும் வலி நின்றபாடில்லை. வலி கூடிக்​கொண்டே போனது. திரும்பவும் அதே டாக்டர். அதே கிளினிக். அந்த சிறிய கிளினிக்கில் பச்சிளம் குழந்தைகளும் அவர்கள் அம்மாக்களுமாய் குழுமியிருக்க நானும் நிர்மலும் மட்டும் கறுப்பாடுகள் போல் உட்கார்ந்திருப்போம்.

"அப்பன்காரங்க எல்லாம் கொடுமைக்காரங்களா இருப்பானுவ போல; ஒருத்தனாவது குழந்தைய எடுத்துக்கிட்டு இங்க வந்திருக்கானா பாரு... களவாணி்ப்பயலுக"

என்று கோவில்பட்டி வழக்கில் திட்டுவான் நிர்மல். எனக்கு என்னமோ குழந்​தைகள், அம்மாக்கள், அழகான அம்மாக்கள் என்ற வரிசையில் மூத்த கறுப்பாடுகளை பொருத்திப் பார்க்க முடியவில்லை.

சிலசமயம் நிர்மல் வராமல் நான் மட்டும் ஒற்றை கறுப்பாடாக உக்காந்திருப்பேன். அப்போது குழந்தைகளைக் கூட என் கிட்ட விடமாட்டார்கள் தாய்மார்கள். அட்லீஸ்ட் ஒரு பூச்சாண்டி..? ம்ஹூம்.. ஒருவேளை​மெடிக்கல் ரெப் என்று நினைத்திருப்பார்களோ?

டாக்டர் அறை.

"இப்ப என்ன பிரச்னை?"

"அதே வயித்து வலிதான் டாக்டர்"

"மாத்திரை டயட் எல்லாம் கரெக்டா பாலோ பண்றீங்களா?"

"ஆமா"

"அப்படியா? சரி படுங்க, கால மடிச்சு வச்சுக்கோங்க.... இங்க வலிக்குதா.. இங்க, சரி ஒருக்களிச்சுப் படுங்க.."

திரும்ப அதே சதைத் தடவல்கள். அதே விசாரிப்புகள்.

பிரிஸ்கிரிப்ஷனை எடுத்து படித்தவாறு

"மாத்திரை எல்லாம் கம்ப்ளீட் பண்ணீட்டிங்களா"
"ஸின்கோவிட் 30 எழுதியிருந்தது.. 20தான் சாப்பிட்டேன் டாக்டர்"

"இதோ பாருங்க, மாத்திரைங்க எடுத்துக்கிறது ஒரு கோர்ஸ் மாதிரி. வயித்து வலி நின்னுட்டாலும் கோர்ஸை கன்டினியூ பண்ணணும்"

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து டாக்டரிடம் காய்ச்சல், காயம் இவை தவிர வேறு எதற்கும் போன ஞாபகம் இல்லை. வயிற்று வலி இந்த பாடு படுத்துதே என்று ஒரு கடுப்பும், வாய்க்கு ருசியாக சாப்பிட்டு மாதமாச்சே என்ற வயிற்றுக் கடுப்புமாய்,

"டாக்டர்.."

"என்ன?"

"ஒரு மாசமா வயித்த வலிச்சிட்டே இருக்கு.. டயட்ல ஸ்டிரிக்டா இருந்தாலும்.."

"ஸ்மோக்கிங் உண்டா?"
"ம்ம்"
"டிரிங்க்ஸ்?"

"...அப்பப்ப"
"இதெல்லாம் முதல்ல நிறுத்துங்க"

"......"
"சரி கண்ட்ரோல் பண்ணுங்க"

"ஓகே டாக்டர்"

இப்படியும் மசியவில்லை வயிற்று வலி. அடுத்த வாரமே அலறி அடித்துக் கொண்டு ஓடினேன் டாக்டரிடம்.

அது ஒரு சாயுங்காலம். 5 மணி இருக்கும். கைராசிக்கார டாக்டரிடம் வயிற்று வலிக்கு வைத்தியம் பார்ப்பது எவ்வளவு கொடுமை என்று அனுபவித்துப் பாருங்கள்... ஆட்டோமேட்டிக்கா நீங்களே ஒரு இடுகை எழுதிவிடுவீர்கள்.
டாக்டருக்கு ஒரு கிங்கரி (கிங்கரருக்கு​பெண்பால்). செவிலிப்பெண், டோக்கன் கொடுப்பவள், ரிஷப்பஸனிஸ்ட், டெரரிஸ்ட் இப்படி எல்லா அடைமொழிக்கும் பொருந்தும் ஒரு 20 வயதுப் பெண்.

"கொஞ்சம் அவசரம். டாக்டரைப் பார்க்கணும்"
"ஆங்.. இவ்ளோ கொயந்தயங்க வெயிட் பண்ணிட்டிருக்காங்கல்ல.. அதெப்படி வுடுறது?"
"இல்லைங்க கொஞ்சம் அவசரம்"
"எல்லாம் டோக்கன் வாரப்பதான்"
இதைச் சொல்லும் போது அந்த மினுமினு கருப்பியின் தலை வேறுபக்கமாக திரும்பிக் கொள்ளும். அமுல் பேபிகளுக்கு மத்தியில மருந்து வாசனையில் ​போரடிச்சு போயிருக்கிறவளுக்கு.. கொஞ்சம் இளைப்பாறுதலாக ஒரு காம்ப்ளான் பாய் வந்து போயிட்டிருக்கானேன்னு கூட இரக்கம் வரலீயா என்று கேட்க நினைத்து பேசாமல் திரும்பி வந்து பெஞ்சைத் தேய்க்க ஆரம்பித்தேன். வயிற்று வலி வேறு படுத்த ஆரம்பித்துவிட்டது.
உடம்புக்குள் வலி என்றாலே ஒரு மர்மமும் சேர்ந்து கொண்டுவிடுகிறது. மத்திய பிரதேசம் வேறு ஆயிற்றா, என்னதான் காரணமாக இருக்கும் என்று குழம்ப ஆரம்பித்து விட்டது. அஜீர்ணம், பித்தம், பைல்ஸ், அல்சர், உஷ்ணம், வயிற்றுக்கட்டி என கர்ப்பம் தவிர எல்லா சாத்தியங்களையும் யோசித்துவிட்டிருந்தேன் (அப்போது கூட கிட்னி ஸ்டோன் ஞாபகத்து வராததுக்கு காரணம் கிட்னிக்கும் வயிற்றுக்கும் ரொம்ப தூரம்னு நினைச்சதுதான்).

குழந்தைகள், அம்மாக்கள், ரிஷப்ஸனிஸ்ட் என வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்​தேன். டோக்கன்காரி என்ன நினைத்தாளோ தெரியவில்லை..

"சரி நீங்க போங்க"

யாரோ ஒரு அம்மா செய்த தியாகமா, இல்லை டோக்கன்காரியின் விளிம்பு மீறி கசிந்த இரக்கமா என்று தெரியவில்லை.
"தாங்க்ஸ்"

என்று கஷ்டப்பட்டு சிரித்துவிட்டு டாக்டர் அறையுள் நுழைந்தேன். பார்த்தவுடன் கேட்டுவிட்டார்.

"என்ன இன்னும் வயித்துவலி சரியாகலியா?"

"ஆமாம்"

தாமதிக்காமல் இரண்டு டெஸ்டுகளை எழுதித்தந்தார். ஒன்று மலப்பரிசோதனை. இன்னொன்று ஸ்கேனிங்.
ஸ்கேனிங்கில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என் வயிற்றின் முதல் கல்.
- தொடருவோமா..?

13 comments:

நேசமித்ரன் said...

உடம்ப பார்த்துக்கோங்க ஐயா
தண்ணி ,சிகரெட் விட முடியாட்டாலும் குறைங்க நண்பரே !

நந்தாகுமாரன் said...

தொடருங்கள் ... ஸ்வாரஸ்யமான நடையில் நல்லதொரு அனுபவப் பகிர்வு ... காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடியுங்கள் (diuretic) ... தண்ணியோடு தண்ணி கலந்தே சாப்பிடுங்கள் ... நீர்காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள் ... எப்போதுமே உடலை ஒரு liquid stateஇல் வைத்துக் கொள்ளவும் ... அறிவுரைகளைப் பார்த்து குறைந்த பட்சம் கோபப்படாதீர்கள் ... அடுத்த பதிவில் சந்திப்போம் ... take care man ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லா இருந்ததா உங்க கல்

சூப்பர்

Nathanjagk said...

நன்றி நேசமித்ரன் - சிகரெட் இப்ப ஒரு நாளைக்கு 3-4 தான், தண்ணி 2 வாரத்து ஒருக்கா.

நன்றி நந்தா - காலையில ஒரு லிட்டர் குடிக்க முடியறதில்ல - முக்கா லிட்டர் குடிச்சிரேன்
இது அறிவுரைகள் அல்ல, அன்பு!

பாசக்கார பயங்க!!!

கல்ல கடைசி வரைக்கும் பாக்கவேயில்ல ஸ்டார்ஜன்.. அதுவா வந்திட்டது போல! 3 தடவை கல் இருக்குன்னு மருத்துவமனையில அட்மிட் ஆனேன். ஆபரேஷன் கூட முடிவு பண்ணிட்டாங்க. ஆனா 3 தடவயும் கல் தானாவே வந்திட்டது. கல் எப்படியிருக்கும் கூட​தெரியாது!!

Nathanjagk said...

நந்தாவுக்கு ஒரு கேள்வி:
//தண்ணியோடு தண்ணி கலந்தே சாப்பிடுங்கள்//
நான் அதிகம் சாப்பிடுவது விஸ்கிதான். ஒரு குவாட்டர் என்றால் அது கூடு ஹாப் லிட்டர் ​சோடா சேர்த்து சாப்பிடுவேன். இது ஓகேவா? இல்லை தண்ணிதான் பெஸ்டா?

ஷங்கி said...

அன்புத்தம்பி!, இத அருமைன்னு சொல்லலாமா? ஏன்னா நீங்க உங்க வலியைப் பத்தி எழுதியிருக்கீங்க! எனக்கும் இதுல ஒரு அனுபவம் இருக்கு. எழுதணும்னு வைச்சுருக்கேன். அதுக்குள்ள நீங்க போட்டுட்டீங்க! பின்ன ஒரு நாள் இடுகை வரும். அப்புறம் இடுகையில நிறைய சந்துல சிந்து பாடியிருக்கீங்க! சரி சரி நடத்துங்க நடத்துங்க!! இன்னைக்கு இடுகை போட்டுட்டேன். நேரமிருக்கும்போது வாங்க!

nithya said...

டேய் குமாட்சி மண்டிய சரக்கு அதிகமா குடீட்ச வயித்துல கல்லு வரமா பின்ன புல்லையா வரும்

அதிலும் டோய்க்கன் கொடுக்கிர பொன்னு ஃபிகரா இல்லையா வயித்துல கல்லு இருந்தும் கொலுப்பு குரையல

Nathanjagk said...

>>சங்கா,
ண்ணா, நீங்கல்லும் வயித்தில கல்ல சுமந்தீங்களா? என்ன ஒரு ஒத்துமை!! ​ஜெர்க்-ல ஆரம்பிச்ச, சேம் பின்ச் இன்னும் கிள்ளிக்கிட்டேயிருக்கு பாருங்க.​ஏதோ ரெண்டு வார்த்த ப்ளோவுல வர்றதுதான் (கெ..கெ) அத ​போயி சந்து சிந்துன்னுட்டு லந்து பண்றதா?? எனக்கு நீங்க அண்ணன் மாதிரி... (உள்ளத்தைக் கிள்ளாதே கார்த்திக் ஸ்டைலில் அழுகிறேன்)

நந்தாகுமாரன் said...

No Soda please ... just mix it only with water ... soda might contribute to stone formation i guess (though I am not sure about this ... but it will definitely give more calories and gas so avoid it) ...

Nathanjagk said...

Nundhaa கூறியது...
//No Soda please ...//
ரொம்ப நன்றி நந்தா!ஆனா இத ​கொஞ்சம் லேட்டா படிக்கிறேன் ​போலிருக்கு. இப்பதான் ஒரு குவாட்டர் வித் ​சோடா அடிச்சிட்டு வந்தேன். அடுத்த முறையிலிருந்து ​வெறுந் தண்ணிதான்.

ஷங்கி said...

அண்ணன் மாதிரின்னு சொல்லிட்டாருடோய்!!! அப்ப கண்டுக்காம விட்டுருவோம். ஓக்கே ஒக்கே டபுள் ரைட்! நடத்துங்க உங்க வேலையை!!

Unknown said...

jega
unga comedykku alave illaya
padiththuvittu remba neram thanyaha sirithen
finally st jhons nurse ponna maranthuteengala

Nathanjagk said...

அன்பு ப்யூச்சர் சாந்தி,
செயின்ட் ஜான்ஸ் நர்ஸை மறக்க முடியுமாங்க? உயிர் காத்த தெய்வம்! பஸ் கூப்பன் மட்டும் தான் எனக்கு அப்ப தெரியும். பஸ்கோபன் என்கிற பெயரில் ஒரு பெயின் கில்லர் இருக்கு என்பது அவங்களாலதான் தெரியும்.. வயிற்று வலி தாங்க முடியாம அவங்ககிட்டதான் போய் நின்னேன்.
அவங்க அருளால தான் அன்னிக்கு எமர்ஜென்ஸி அட்மிஷன் கிடைச்சது. தினமும் சாப்பாடும்.
நர்ஸையும் மறக்க முடியாது.......... நர்ஸ் ப்ரண்ட் ஜோதியையும் மறக்க முடியாது!!