Saturday, July 25, 2009

கருப்புச்சாமி காத்த ரகசியம்


மீண்டும் காளிதாஸ்! ஏற்கனவே நமக்கு அறிமுகமான அதே ஒர்க் ஷாப் காளிதான். காளியின் ஆளுமை ஒரு நாவலுக்கு ஒப்பானது. உதாரணத்துக்கு காளியும் பெண்களும். பைக்குகளை சரி செய்யும் அதே லாவகத்ததுடன் பெண்களை அணுகுபவன். வசதியாக காளிதாஸ் ஒர்க் ஷாப் பக்கத்திலேயே நகரின் மகளிர் உயர்நிலைப்பள்ளி.

சைக்கிளில் வரும் குமரிகள், டயர் காற்றடிக்க மகுடி அண்ணன் சைக்கிள் கடையில் நிற்க வேண்டிவரும். உதவி செய்வதாக காளி சிலசமயம் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொடுப்பான். அது என்ன பெரிய வேலை கம்ப்ரசர் அழுத்தித் தேக்கிய காற்றை பைப்பில் இழுத்து வர வேண்டும். அப்புறம் இரண்டு மவுத்துகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மவுத் என்றால், சைக்கிள் சக்கர மவுத்தும், ஏர் பைப்பின் மவுத்தும் மட்டுமே.
குமரிகள் கொள்ளை அழகாயிருப்பதுக்கு காளிதாஸை குறை சொல்ல முடியுமா?அப்படிதான் ஒருமுறை ஒரு பத்தாம்பு படிக்கும் வாலைக்குமரி மகுடி அண்ணன் சைக்கிள் கடை வாயிலில் நின்றாள்.

"ஏனுங், ஏர்.."

மகுடி அண்ணன் அப்போதுதான் ஒரு சைக்கிளுக்கு ஓவர்ஹால் செய்து கொண்டிருந்தார். சற்று தாமதமாகவே பக்கத்து ஒர்க் ஷாபிலிருந்து பாய்ந்து வந்தான் நம்ம காளி.

"இருங்கண்ணா, நான் பாத்துக்கிறேன்"

என்று சைக்கிளில் சாய்ந்து நிற்கும் கிளியைப் பார்த்து சிரித்தவாறே..​சைக்கிளைப் பிடித்தவாறே ஒரு சிற்றிளம்​பெண், அவளை அண்ணாந்து பார்த்தவாறே காற்றுபிடிக்கும் ஒரு பரபர இளைஞன். வானத்தில் ஆரஞ்சு சுளைகளை உறித்து வீசிக்கொண்டே இறங்கும் மாலைச்சூரியன். நினைத்துப்பாருங்கள்.. ஒரு கவிதை மாதிரி இல்லை? காளியும் இப்படி காற்றாக கசிந்து பறந்து கொண்டிருந்தான்.

"டுப்ப்ப்" என்ற வெடிச்சத்தம் கேட்டுக்கும் வரை. ஆமாம்.. கொள்ளவுக்கு மீறினால் எதுவும் வெடித்துத்தானே சிதறும்? டயர் வெடித்த அதிர்ச்சியில், சைக்கிளை காளியின் மேலேயே போட்டுவிட்டு கத்த ஆரம்பித்துவிட்டாள்.

"மரியாதயா டயரை நீங்கதான் மாத்திக்கொடுக்கோணும். இதுதான் காத்துப்பிடிக்கிற லட்சணமா?"

காளிதான் அசரமாட்டானே?

"ஏன்.. சத்தம் போடறே, நான் நல்லாத்தான் காத்து பிடிச்சேன், உன் டயரு லட்சணம் அப்படி"

அப்புறம் மகுடி வந்து சமாதானம் செய்து வேறு டயர் மாற்றித் தருவதாக பைசல் பண்ணி​வைத்தார். இது காளி பற்றிய ஒரு சின்ன அறிமுகம்தான். இனி வரப்​போவதுதான் மெயின் பீஸ்.

மெயின் பீஸ்: காட்சி-1

சாயந்திரம் ஏழு அல்ல எட்டு மணி வாக்கில் வீடு அடைவான் காளி. ஒர்க் ஷாப்பில் அனைத்து நண்பர்களும் காலையிலிருந்து மாலை வரை ஒன்றாய் கும்மியடித்திருந்தாலும்.. இரவு வீடு திரும்பியதும், சாப்பிட்டு முடித்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் ஒரு இரவு உலா போவது வழக்கம்.
இந்த உலாவில் கருப்புச்சாமியும் கிருஷ்ணனும் உண்டு. கருப்புச்சாமி ஒரு கொத்தனார். கிருஷ்ணன் கார் டிரைவர். எல்லோரும் ஒரே ஸ்கூலில் ஒன்றாக படித்து, ஒரே தெருவில் வாழும் நண்பர்கள். அப்போதைக்கெல்லாம் அவர்களுக்கு வயது இருபதுதான் இருக்கும். கிருஷ்ணன் முதலில் காளி வீட்டுக்கு வருவான்.

"சாப்டியா, சரி வா போயி கருப்புசாமிய பாத்துட்டு வரலாம்"

எதுக்குடா இந்நேரம் வெளிய கிளம்பீட்டிங்க என்ற காளியின் அம்மா கேள்விக்கு கருப்புச்சாமிய பாக்கப் போறோம் என்றும், கருப்புச்சாமி அம்மா கேட்கும் இதே கேள்விக்கு காளியப் பாக்கப் போறோம் என்றும் ரெடிமேட் பதில்கள் வரும்.​

"வீட்டுலேயே டீ, காப்பி, மிக்சர், சாப்பாடுன்னா நல்லாதான் கவனிக்கிறாங்க. சிகரெட் ஒண்ணு மட்டும் பத்த வச்சுக் கொடுத்தாங்கன்னா எதுக்கு வெளிய சுத்தப்​போறோம்..?" என்று கிருஷ்ணன் அலுத்துக் கொள்வான்.

கருப்புச்சாமியும் சேர்ந்தவுடன் மூவர் அணி மேற்கிலுள்ள கடைப்பக்கமாக நகரும். கடைப்பக்கமுள்ள திண்டில் உட்கார்ந்து கொண்டு புகைப்பது வழக்கம். சிலசமயம், கருப்புச்சாமி ஒரு உந்துதலால் கேட்பான்,

"டே காளி, ஆயி போயிட்டு வரலாமா?"

"அதெல்லாம் வீட்டிலேயே போயிட்டு வரமாட்டீங்களாடா?" என்று குமுறுவான் கிருஷ்ணன்.

"கிச்சா, வீட்டுலே சுவத்தப் பாத்துக்கிட்டே போறது ஒரு பொழப்பா? இங்க அப்படியே ஓப்பன்ல காத்தோட்டமா போறது எப்படியிருக்கு..?"

என்று நாடோடிக் காற்றின் தத்துவம் பேசுவான் காளி.

"எப்படியோ போய்த் தொலைங்க"

என்று கிருஷ்ணன் அவர்கள் கூடவே போவான்.​கொஞ்சம் தெற்கு பக்கமாய் நகர்ந்தால் லயன்ஸ் கிளப் கல்யாண மண்டபம். அதற்கு முன்பாக இருளடர்ந்த புதர் மண்டிய மைதானம். காளியும், கருப்புச்சாமியும் இன்னொரு தம்மைப் பற்ற வைத்துக்​கொண்டு போய் உட்கார்ந்து கொள்வார்கள்.கிருஷ்ணன் தனியாக புகை ஊதிக் கொண்டிருப்பான். இந்த ராத்திரிக் கச்சேரி இப்படியே இனிதாக போய்க்​கொண்டிந்தது.​

மெயின் பீஸ்: காட்சி-2

ஒரு சமயம் கிருஷ்ணன் ஒரு பழுப்பு நிற அம்பாசிடருக்கு டிரைவராகினான். பொதுவாக அவன் வாடகையெல்லாம் முடித்துக் கொண்டு வீடு திரும்ப இரவு எட்டு எட்டரை ஆகிவிடும். அதனால் கிருஷ்ணன் சிலசமயம் வீடு திரும்பாமல், காரோடு மேற்கிலுள்ள கடைத் திண்டுக்கு வந்துவிடுவான். அவனுக்கு முன்னமே காளியும் கருப்புச்சாமியும் ஆஜராகியிருப்பார்கள்.
ஒரு நாள் கிருஷ்ணன்,

"காளி ரொம்ப பசியாயிருக்குடா, பக்கத்துல புரோட்டா போடறான். போயி சாப்பிடலாமா?" என்று கேட்டான்.

"சரி.. எனக்கு ஒரு கொத்துப் புரோட்டா" என்று தயாரானான் காளி. அன்றிலிருந்து இவர்கள் இருவரும் திண்டில் காத்திருப்பதும், கிருஷ்ணன் பழுப்புநிற காரில் வந்து இறங்குவதும், புரோட்டாக்களும் கொத்துப் புரோட்டாக்களும் தின்பதுமாய் கதை தொடர்ந்தது.

பின்னொரு நாள், கிருஷ்ணனை எதிர்பார்த்து திண்டில் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் காளியும் கருப்புச்சாமியும்.
"கருப்பா, ஆயி" என்று காளியின் உந்துதலில் இருவரும் வேலையை முடித்துக் கொண்டு திரும்ப திண்டு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இரவு ஒன்பது மணி. சோடியம் வேப்பர் வெளிச்சங்கள் பொழுதை பழுப்பாக்கிக் கொண்டிருந்த சமயம். தூரத்தில் ஒரு கார் வந்து​கொண்டிருந்தது.

"கருப்பா, அங்க பாருடா கிச்சா காரு வருது"

"லேய்.. அது வேற காரா இருக்கும்டா"

"இல்லடா மாமா, கிச்சான் வண்டியேதாண்டா, பாரு பிரவுன் கலர்ல இருக்குது"

"சரி, பொறு எப்படியும் இங்கதான வருவான்"

"இல்லடா, நாம முன்னாடி நடந்து போயி பரோட்டா கடை பக்கம் போயிடலாம்"

"என்னடா சொல்ற?"

"ஆமாண்டா லேட்டாயிடுச்சில்ல, கார அப்படியே திருப்பிக்கிட்டு வீட்டுக்கு போயிட்டான்னா?"

"என்ன இப்பிடியே புரோட்டா சாப்பிடப் போலாங்கிறியா?"

"ஆமா மாமா.. "

"லேய்.. ஆயி போயிட்டு, கழுவாமக்கூட"

"யாருக்குடா மாமா தெரியப் போவுது.. நீ எதுவும் கிருஷ்ணன் கிட்ட மூச்சு உட்ராத"

"நீ வேணா தின்னுத்தொலை, நான் வரலடா சாமி"

காளியும் கருப்பனும் வேகவேகமாய் கார் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அங்குதான் ஒரு ட்விஸ்ட். கார் சடாரென அவர்களையும் கடந்து நில்லாமல் சென்றது. கார் கடந்த பின்னாடிதான் தெரிந்தது அது கிருஷ்ணன் காரில்லை என்று. பெருத்த ஏமாற்றமாக போயிவிட்டது காளிக்கு. அதைவிட கருப்புச்சாமி இந்த கொத்துப் பரோட்டா விஷயத்தை மற்ற நண்பர்களுக்கும் பத்த வைத்து விடுவானோ என்று பயமாகவும் இருந்தது.

"டேய் மாமா, இந்த விஷயத்தை யாருட்டயும் சொல்லிராதடா"

"ச்சேச்சே.. இதப் போயி சொல்லிக்கிட்டு"

கொஞ்சம் சமாதானம் ஆனவனாய் நடந்தான் காளி. கருப்புச்சாமி வீடு வந்ததும் திரும்ப ஒருமுறை உறுதி​செய்து கொள்ள விரும்பினான்.

"மாமா சத்தியமா மேட்டர யார்டயும் சொல்ல மாட்டியே?"

"இவனொருத்தன்.. சொல்லமாட்டேன் போயி படுடா"

"சத்தியமா?"

"சத்தியமா! போதுமா?"

இதுதாங்க கருப்புச்சாமி காத்த ரகசியம்.

டெயில் பீஸ்:

ஒருமுறை நண்பர்கள் அனைவரும், பத்துப்பேராக பொள்ளாச்சி பக்கத்திலுள்ள சிற்றூருக்கு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். சரக்கடிக்கலாமென்று, அந்த ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமாக காரில் சென்று கச்சேரியை ஆரம்பித்தார்கள். ரெண்டு ரவுண்ட் போனதும் காளிக்கு வயிறு கலக்கிவிட்டது. எக்ஸ்யூஸ் மீ என்று ஒதுங்கிவிட்டு வந்தான். மறுநாள் காலையில் எழுந்து திருமணத்திற்கு செல்ல தயாரானார்கள். அப்போதுதான் வெளிக்குப் போய்விட்டு வந்த கருப்புச்சாமி கேட்டான்.

"காளி.. சுத்து வட்டாரத்துல எங்கியுமே தண்ணியேயில்லாடா, கால் கழுவ எங்கடா போறது?"

"கல்யாண மண்டபத்துக்குதான்"

சரியென்று மண்டபத்தை நோக்கி நடந்தார்கள். திடீரென்று ஏதோ பொறி தட்டியவனாக காளியைக் கேட்டான் கருப்பன்,

"மாப்ள, நீ நைட்டுப் போனியே, எங்கடா கால் கழுவுன??"

தலையை கோதி விட்டவாறே காளி சொன்னான்,

"இருட்டுல தனியா தண்ணிய எங்கனு போயி தேட?? அதான் மிக்ஸிங்கு வச்சிருந்த செவன்அப்பை யூஸ் பண்ணிக்கிட்டேன்"

குறிப்பு:

1. இது புனைவல்ல
2. வரும் பின்னூட்டங்களைப்​பொறுத்து, அம்மாதிரி இடுகைகள் எழுதலாமா வேண்டாமா என முடிவு செய்யப்படும்
3. பின்நவீனத்துவத்திற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையவே கிடையாது

18 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆய் கதை மன்னன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// அதான் மிக்ஸிங்கு வச்சிருந்த செவன்அப்பை யூஸ் பண்ணிக்கிட்டேன்"
//

பன்னாட்டு மும்பினியாரை பழிவாங்கி விட்டீர்கள்

யாத்ரீகன் said...

:-))))))))))))))))))))))))))))))) kadaisi varaikum ragasiyam kaathaara ilaya ;-))))

ஷங்கி said...

தம்பியார், சாருவை ரொம்பப் படிக்கிறீங்க போல?!

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

சுருக்கமாக எழுதுங்க ப்ளீஸ்

Nathanjagk said...

அன்பு SUREஷ் தல, வருகைக்கு நன்றி! ​ரொம்ப ​யோசித்து இந்த விஷயத்தை எப்படி எழுதறது நம்ம தீவிர அதி தீவிர ரசிகர்கள் எப்படி எடுத்துக்​கொள்வார்கள் என்று பயந்து போட்ட இடுகை. நல்லாத்தான் இருக்கு நீங்க ​கொடுத்த பட்டப்​பேரு! இது அடுத்த அவார்டா? அவ்வ்வ்..

அன்பு யாத்ரீகன்,
கருப்புச்சாமி காத்த ரகசியம்! அதாவது past tense! ஹிஹி!!!

அண்ணன் சங்கா, சாருவைப் படிச்சதனாலன்னு​சொல்ல முடியாது. இந்த சம்பவம் எங்கள் நண்பர்கள் குழாமில​ரொம்ப​பேமஸ். கவனிக்க, இடுகையில் குறிப்பிடபட்டிருக்கும் அனைத்தும் உண்மையே - ​பெயர்கள் உட்பட! இருந்தாலும் ​கொஞ்சம் ஓவரா​போயிட்டமோன்னு மோட்டுவளையை பாக்கிறேன்!! ​​பேசாம இடுகய தூக்கிரலாமா??

அன்பு சந்திரமௌளீஸ்வரன், வரு​கைக்கும் கருத்துக்கும் நன்றி!
//சந்திரமௌளீஸ்வரன் கூறியது...
சுருக்கமாக எழுதுங்க ப்ளீஸ்
//
என்னோட திறமை அவ்வளவுதான். நீங்கள் இதை படிக்க எடுத்துக் கொண்ட நேரத்திற்கு நன்றி. சுருக்கம் என்றால் எவ்வளவு என்றும் விளக்கினால் நன்றாயிருக்கும். நிற்க, இங்கு தங்களை பகடி ​செய்யவில்லை. உண்மையிலேயே இந்த இடுகையை எழுதும்​போது நானும் இதன் நீளத்தை சந்தேகித்தேன். இருந்தும் கருப்புச்சாமி காத்த ரகசியம் சொல்லும் விஷயம் அருவருப்பாக ​போய்விடுமோ, மற்றவர்களால் தூற்றலுக்கு ஆளாகிவிடுவோனோ என்ற பயத்தில் கொஞ்சம் சவ்வு இழு இழுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஏன் நீங்கள் இந்த இடுகையையே ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்​கொண்டு, இதை சுருக்கமாக எழுதி ஒரு டெமோ காட்டக்கூடாது? அல்லது எங்கெங்கெல்லாம் எடிட் ​செய்யப்பட்டிருக்க ​வேண்டும் என்று சுட்டிக்காட்டக் கூடாது? அப்படி​செய்தீர்களேயானால் அதை ஒரு பாடமாக, முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு ​மேலும் சிறப்பாக ​செயலாற்றுவேன் என்று திண்ணமாக நம்புகிறேன். பாருங்கள், உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் எழுதுவதைக் கூட என்னால் சுருக்கமாக எழுத முடியவில்லை. இது ஏதாவது ஒரு ​நோயாக இருக்கக்கூடுமோ என்றும் அஞ்சுகிறேன்!

Nathanjagk said...

எல்லார்க்கும் ஒரு சொல்ல மறந்த விஷயம்.. இடுகைக்கு ​போட்டிருக்கிற படம் நம் காலடியே வரைந்தது (காப்பிரைட் கூட போட்டாச்சுப்பா!!!) சும்மா Windows Paintல ​போட்டு தீட்டினது! எப்படியிருக்கு நம்ம பெயின்டிங்???

கலையரசன் said...

நகைச்சுவையுடன் கூடிய பதிவு உங்களுக்கு நன்றாகவே வருகிறது..

அப்புறம்.. பெயின்டிங்கை காப்பிரைட் தரமுடியுமா? :-)

புரோபைல் போட்டோவுல நடிகர் 'கரண்' போலவே இருக்கீங்க பாஸ்..

கீ இட் அப்!!

Nathanjagk said...

அன்பு கலையரசன், உங்களுக்கு இல்லாத படமா? எடுத்துக்கோங்க! இன்னும் புதுசா வரைஞ்சு ​கொடுக்கணுமா? ​கேளுங்க! தந்துட்டாப் ​போச்சு!! ​போட்டாவப் பாத்துட்டு கரண் மாதிரின்னு ​​சொல்லிட்டீங்க!! ஹிஹி.. ஒரு திருஷ்டிப் ​பொட்டு வச்சுடலாமா - கன்னத்தில???

Admin said...

உங்க கதை நகைச்சுவை உணர்வோடு நன்றாகப் போகிறது வாழ்த்துக்கள் தொடருங்கள் நண்பா...

ஷங்கி said...

எதுக்கு தூக்கணும்?! நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் நண்பர்கள் ஆட்சேபித்தாலொழிய இதைத் தூக்க அவசியமில்லையென்றே கருதுகிறேன். உங்கள் ஓவியமும் நன்று. நேற்றுத்தான் உங்கள் ப்ரொஃபைலில் ஓவியம்னு போட்டிருக்கிறதைப் பார்த்து பிரமித்த பொழுது இன்று உங்கள் ஓவியம் என்று சொல்லியிருக்கிறீர்கள்!

சண்முகம் salem said...

ஆகா...!
சூப்பரு...!
அடடே...!
அ(எ)ருமை......

கார்த்திக் said...

ஜெகநாதன்.. கொஞ்சம் பெரிய இருக்கையா தான் இருக்கு.. ரகசியத்தை காக்க வேரு வழி இல்லை தான். அடுத்தமுறை இடுக்கை அளவை சிறியதாக திரைடுங்கள்.

Nathanjagk said...

அன்பு சங்காண்ணா... நன்றி! ஓவியம்தான் என்னோட முதன்மையான ஈடுபாடு - ஆனா ​கொஞ்சம் காஸ்ட்லியானது!!!

ஏப்பா சம்முவம்...?? இது என்ன கட்-காபி-​பேஸ்ட் பின்னூட்டமா??? இருந்தாலும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

ப்ரிய சந்ரு,
நீங்க அடிக்கடி வரணும், உங்களின் கருத்துக்களால்தான் நான் வலுப்பெறுகிறேன். தங்கள் வாழ்த்துக்கு கடமைப் பட்டவனாகிறேன்! நன்றி!

இனிய கார்த்திக்,
அவ்வளவுதானே??? இனி அளவு ​மேல கவனம் எடுத்துக்கிட்டாப் ​போச்சு! நீங்களெல்லாம் எடுத்துச் ​சொல்லாம ​வேற யாரு​சொல்லப்​போறா? ம்..??? நன்றி கார்த்திக்!

Beski said...

இதுபோல் தொடர்ந்து எழுதலாமென ரெகுலர் கஸ்டமட்ர்ஸ் - திநகர் கிளை சார்பாக சொல்லிக்கொள்கிறேன்.
---
ரெகுலர் கஸ்டமர் ஏன் லேட்டா வந்தேன்னு கேக்காதீங்க... கொஞ்சம் பிசி. மத்தபடி படமும் கதையும் நல்லாயிருக்கு.

Nathanjagk said...

அலோவ் ஏனாஓனா, உங்களப் ​போயி ஏன் ​லேட்டுன்னு நான் ​கேக்க முடியுமா??? ஏன் டமாஸ் பண்றிய?

Beski said...

//அலோவ் ஏனாஓனா, உங்களப் ​போயி ஏன் ​லேட்டுன்னு நான் ​கேக்க முடியுமா??? ஏன் டமாஸ் பண்றிய?//

இல்ல மாம்ஸே, நம்ம சக வருகையாளர்களுக்கு உடனே பின்னூட்டம் போட்டுவிடுவேன். இப்ப கொஞ்சம் பிசி... வாசிச்சுட்டு நெறைய இடத்துல பின்னூட்டம் மிஸ்ஸிங். இப்போ ஊருக்கு வேற போறேன். நெக்ஸ்ட் வீக் மீட் பண்றேன்.

ஷங்கி said...

ஏனா ஓனா அப்ப, பரோட்டாப் பதிவு அடுத்த வாரம் இருக்கா?