Monday, November 30, 2009
வந்தியத்தேவனிடம் ஒரு பீடி..!
வந்தியத்தேவனிடம் ஒரு பீடி
கடன் வாங்கினேன்!
அப்போது
அவன்...
குந்தவித் தேவியை
புணர்ந்து முடித்திருந்தானாம்!!!
(அடைப்புக் குறிக்குள் இருப்பதை
திறந்து பார்க்க ஒரு மனம் வேண்டும்.
உங்களிடம் அது இருக்கிறதென்ற
தினவு இருந்தால்... தொடருங்கள்!)
நான் என்னை விட்டு விடுதலையாகிய
காலக்கிரமத்தில்
தொல்காப்பியன் என் பக்கமிருந்தான்;
கொஞ்சம் காது கடன் கொடுத்தால்
நீரோவின் பிடில் என்னை மயக்கும்.. மயக்கியிருக்கும்;
யேசுவின் இறுதி ரத்தம்
இறுகிய ஒரு கர்ச்சீப் என் வசமாகியிருக்கும்;
(ஏழாவது லார்ஜ்ஜில்....
என்னை இழுத்துக் கொள்ளும்
கைரேகையில் இருக்கிறது - என்
சிறு புகை விலாசம்!)
இப்படிப் பறந்த மனம்
21 இன்ச் திரையில் தெரிந்த
இளவயது காரிகையிடம்
கைதாகி ரிமோட்டின்
சிவப்புப் பொத்தானில் மடிந்து விட்டது!
(இவ்வளவுதான் கவிதை!
இவ்வளவுதானா கவிதை என்பவரிடம்.......
இருங்கள்; ஒட்டகத்தின் இரைப்பைக் கிழித்து
நீர்க்குடித்து மீண்டு(ம்) வருகிறேன்!)
(அடைப்புக்குறிகள் தீர்ந்த மாதிரி
தோன்றவில்லை..
ஆனால் அடைப்பதற்கு ஏதுமில்லாத
கனவுகள் பறக்கும் மனதை என்ன செய்ய நான்..??)
Friday, November 27, 2009
பறத்தலின் நிழல்
குணா என்பது அவன் பெயராக அவன் நினைவில் அழுந்தி உட்கார்ந்த போது தான் வளர்த்த கோழிக்குஞ்சுகளுக்கும் பெயரிடுபவனாய் இருந்தான். மஞ்சு, சின்ன மஞ்சு, பாப்பாத்தி இப்படியாக பெயரிட்டு அழைத்து வந்தான் தன் கோழிக்குஞ்சுகளை. ஒரு சாயுங்காலம் விலகிய சிம்னி சிணுங்கும் பொழுதில் அம்மாவின் புருஷன் வந்தான். வந்ததும் குணாவின் முதுகில் உதை விழுந்தது.
உதையில் குப்புற சுருண்டு விழுந்த குணாவுக்கு வாயில் உப்புக்கரித்தது.. சிம்னி ஒளியில் தன் முன் கொஞ்சம் ரத்தம் சிந்திக்கிடப்பது தெரிந்தது.
"என்னன்னு சொல்லிட்டு எம்மவனை அடிய்யா." அவளின் ஓங்காரத்து மேற்படியான உதைகளுக்கிடையில் சொல்லப்பட்டது:
"என்ன தைரியம் இருந்தா என்ர மவளுக்கு முத்தம் கொடுத்துட்டு ஓடிவந்திருப்பான் இந்த எச்சைப் பொறுக்கி.."
"ஏந் அவ இவன் தங்கச்சி மாதிரியெல்ல..." என்று முடிக்கும் முன்னே அடிவாங்கி சாய்ந்தாள்..
பொணங்கடி நீங்க என்ற அழுத்தமான முடிவுச் சொல்லோடு வெளியேறினான் அடித்தவன்.
"ஏலே நீ அந்த மஞ்சு கூட விளையாண்டியாடா? சொல்லுடா.. என்னடா பண்ணுன அவள???" என்ற அம்மா குணாவை அப்போதுதான் பார்த்தாள்.. வாயோரம் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.. அவள் பதறி அலறும் முன்,
"...எனக்கு இந்த கோழி வறுத்து கொடு" என்று எந்த முகச்சலனமும் அவன் பக்கத்தில் வந்த கோழிக்குஞ்சின் கழுத்தைத் திருகி அவளிடம் நீட்டினான். கதறி உயிர் விட்ட பறவையின் பெயர் மஞ்சு என்பதாகயிருந்தது.
2:
குணா தாயின் முகத்தைக் கொண்டிருந்தான். சக்களத்தி வாழ்வை முடித்து தறிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள் குணா அம்மா. ஒண்ணும் வித்தியாசமில்லை என்பான் குணா. ஏழாம் வகுப்பு முடித்துவிட்டு ரெண்டு வருடம் சும்மாவே ஊரைச் சுத்திக் கொண்டிருந்தான்.. அப்புறம் கொஞ்சநாள் வடக்குத் தோட்டத்தில் வேலைக்குப் போனான். ஆட்டு மந்தையை விரட்டிக் கொண்டு காடுகாடாகச் சுற்றியலைந்து விட்டு வருவான். பக்கத்துத் தோட்ட மயிலாத்தா சிலசமயம் இவனை முகுது தேய்த்து விடப் பிடித்துக் கொள்வாள்.. பூவரசம் பூத்த மரநிழலில்.. பண்ணைத் தொட்டியில் நீரள்ளி முகுதுத் தேய்த்து விடுவான்.
ஒரு சமயம் கடுப்பெடுத்தவனாய்.. அவளின் பளபளமுதுகை நன்றாகப் பிராண்டி வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டான்.
ஆடுகளை அம்போவென்று விட்டுவிட்டு வந்ததாக சொல்லி தோட்ட வேலையிலிருந்து நீக்கப்பட்டான். அம்மா விளக்குமாறை எடுத்துக் கொண்டு வரும்போது..
"மூடிக்கிட்டு கெடடி" என்று ஒரே வார்த்தையால் அடக்கி விட்டான்..
நிலா பிறைக் கவிழ்த்து கிடந்த நேரம்... பக்கத்திலுள்ள அணையில் சென்று மல்லாக்க படுத்துக் கொண்டான்... வயிறு பசித்தது. நகங்களை பார்த்தான்.. மயிலாத்தாவின் முகுதுச் சதைத்துணுக்குகளும் காய்ந்த ரத்தமும் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது. ஆழமாக முகர்ந்து பார்த்துக் கொண்டான்.
அணைக்கு கீழுள்ள ஊற்று டீஸல் இன்ஜினை தறிப்பட்டறை எழில் இயக்க ஆரம்பித்திருந்தார். ஸ்டார்டர் சுழற்றி சோக்கை தள்ளிவிட்டதும்.. துடிக்க ஆரம்பித்தது இன்ஜின்.
எழுந்து கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு மயிலாத்தா வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.
3.
தறிக்கு போகிறேன் என்ற எணத்தை குணாவின் அம்மாவால் தடுக்க முடியவில்லை.. கண்டபடிக்கு அவளைத் திட்டுவதோடு அல்லாமல் அடிக்கவும் ஆரம்பித்திருந்தான். பீடிக்கும், சரக்கும் காசு பற்றாமல் அவள் பணத்தை பிடுங்கிக் கொள்ளவான். இல்லாவிட்டால் மயிலாத்தா, கீதா டீச்சர் அல்லது தெற்கு வளவு சரசா இப்படி யாரோ ஒருவரிடம் காசு வாங்கிக் கொள்கிற உரிமை கொண்டிருந்தான்.
நண்பர்கள்,
"ஏலே.. ஒம்முகத்துக்கு நீ போற ஆளுகளடா அவுளுக... என்னடா உன் டேஸ்ட்.. அதுவும் அந்த டீச்சருக்கிட்ட..??"
என்று அரற்றுவார்கள். அப்போதுஇன்று இன்றிரவு டீச்சர் வீடுதான் என்று முடிவு செய்து கொள்வான்.
தறிக்கு சென்ற கொஞ்ச நாட்களிலேயே ரஞ்சிதம் சுற்றி வர ஆரம்பித்தாள்.. ஒருநாள் இரவு பெளணர்மி வெளிச்சத்தில்
அவளைக் ஊர் தண்ணித் தொட்டி உச்சிக்கு கூட்டிச் சென்றான். சிலுசிலுவென்ற தளத்தில் வெட்கம் களைந்து கலவ ஆரம்பித்த நேரம்.. கேட்-வால்வை மூடவோ திறக்கவோ வந்தவன் இவர்கள் மேலிருப்பது தெரிந்து கொண்டான்.. அமைதியாகப் போய் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
"மரியாதையா கீழ இறங்கி வாடா......... மவனே" என்பதற்கு கோபம் வந்தவனாய், தொட்டியிலிருந்து நின்றவாறே.. கூட்டத்தின் மேல் ஒண்ணுக்கடித்தான். கீழிருந்து வந்த கற்களுக்காக இருவரும் கீழிறங்கி வரவேண்டியதாயிற்று.
இறங்கியதும் குணாவை கீழே போட்டு மிதித்தார்கள். ரஞ்சிதத்தை ஊர்பெருசுகள் தனியாக ஒதுக்கி அடித்தார்கள். தன்னை யாரெல்லாம் தீவிரமாக அடிக்கிறார்கள் என்று உன்னித்துப் பார்த்தான் குணா.. டீக்கடை வேலு, மயிலாத்தா புருஷன், டேவிட்டு, சைக்கிள் கடை பரமு, டீச்சர் புருஷன் அப்புறம் தனியார் பஸ் கண்டக்டராக இருக்கும் கதிரு. டேவிட்டும், கதிரும் மட்டுமே சம்பந்தமில்லாமல் தன்னை அடிப்பதாகத் தோன்றியது.
சப்.. சப்.. சப்.. என்று தெளிவாக முதுகில், கன்னத்தில், இடுப்பில் விழுந்தன.. எச்சரிக்கையாக குப்புறக் கவிழ்ந்து படுத்துக் கொண்டான் - அசல் புருஷன்கள் மேல் உள்ள பயத்தில்! அதிகாலை 1 மணிக்கு ஊரில் நில்லாமல் கடக்கும் அரசுப் பேருந்து அன்று மட்டும் கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் போகும் போது, பஸ்ஸில் இருந்து வந்த ஒரு குரல்.. "யாராவது திருட்டுப் பயலா இருக்கும்" என்றது.
4.
சில நாட்களில் தறிவேலை விட்டு நின்றதும், கையில் கொஞ்சம் காசு கொடுத்தார்கள்.. நண்பர்களை அழைத்து டவுன் சினிமாவுக்கு போகலாம் என்றான். முன்மாதிரி யாரும் இவனுடன் பழக விருப்பமில்லாதவர்களாய் மறுத்துவிட்டார்கள்.
விறுவிறுவென்று டேவிட் வீட்டுப் பக்கம் சென்றான். டேவிட் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியன். சைக்கிளில் சுற்றியலைந்து கொண்டிருப்பான். எப்பவும் பாக்கெட்டில் காய்ச்சல், தலைவலி மருந்துகள், நிரோத் பாக்கெட்கள் கணிசமாக வைத்திருப்பான்.
அப்போது காலை பதினொன்றரை மணியிருக்கும். புளியமரங்கள் அடர்ந்த சரிவான மண்சாலையில் வேகமாக இறங்கி, சர்ச் தாண்டிய, டேவிட் வீட்டு முன் நின்றான். சிறிய வீடு. கதவு சாத்தியிருந்தது. டேவிட் மனைவி எப்படியிருப்பாள் என்று பார்த்ததில்லை.
"வீட்டில யாருங்க" என்ற குரலுக்கு கதவவைத் திறந்து நின்றாள் டேவிட் மனைவி. பார்த்ததும் காட்டுச்செடி போல ஒரு பயம் குணாவின் மனதில் படர்ந்தது. இந்த உணர்வு தனக்கு புதிது என்பதாகத் தோன்றியது.
"குணாவா? என்ன விஷயம்?" என்றாள் இயல்பாக... வியப்பாக இருந்தது.. நம்மை தெரிந்து வைத்திருக்கிறாளா என்று. இந்த ஊரில் கேட்காத இனிமையான குரலாக இருந்தது. கையில் சோப்பு நுரையிருந்தது. துவைத்துக் கொண்டிருப்பாள் போலும்.
எதுவும் சொல்லாமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து சிரித்தவளாய்,
"என்ன வேணும்?" என்றாள்.. அவளின் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தவன்.. படக்கென்று அவள் பக்கம் சென்றான்..
"தண்ணி கொடு" என்றான். கொண்டு வந்து கொடுத்தாள். சொட்டுவிடாமல் குடித்துவிட்டு,
"சினிமாவுக்கு போலாம் வர்றியா?" என்றான் வறட்சியான குரலில். அவளோ கொஞ்சமும் சிரிப்பு மாறாமல், "இல்லே வரலே. நீ போயிட்டு வா" என்று திரும்பி வீட்டுக்குள் நடந்தாள்.
அவளின் பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்... அவள் பின்புறமாகச் சென்று தோளைத் தொட்டான். திரும்பியவளைப் பிடித்து இழுத்து அழுத்தமாக உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான். கையில் சொம்பைத் திணித்து விட்டு நடந்தான். திகைத்துப் போய் நின்றிருந்தாள் டேவிட்டின் மனைவி. வரும்வழியில் சர்ச்சில் உள்ள கடிகாரம் பன்னிரண்டு முறை அடித்து அமைதியானது. மனசு ஏனோ படபடவென்றிருந்தது.
5.
தனியாக சினிமாவுக்குப் போய்விட்டு, இரவு பன்னிரண்டு மணியளவில் டீச்சர் வீட்டு கொல்லைப்புறமாக உள் நுழைந்தான்..
வயிறு பசித்திருந்தது. கொல்லையிலுள்ள கிணற்றடியில் உட்கார்ந்தவனாய், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தான்.. சில நிமிடங்களில், பின் பக்கக் கதவு திறந்து கொண்டு டீச்சர் வெளிப்பட்டாள்..
"உள்ள வா.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்..
திரும்பிக் கூடப் பார்க்காமல் புகைத்துக் கொண்டிருந்தான்.. கிணற்றுப் பக்கம் வந்தவள், குணாவின் முகத்தைப் பிடித்துத் திருப்பி, தலையைக் கோதி விட்டாள்,
"என்னடா? என் ராஜாவுக்கு என்ன ஆச்சு??" என்றாள் கிசுகிசுப்பாய்.. அவளின் முகத்தைப் பார்த்தான். சிகரெட்டை கீழேப் போட்டு அணைத்தான். அவனை இழுத்து உதடுகளில் முத்தமிட்டாள்.. ஏதோ நினைவு வந்தவன் போல சட்டென்று விலகி இறங்கி நடக்கலானான். குணா சுவரைத் தாண்டி இந்தப் பக்கம் குதித்த போது, அவன் முன் கொல்லையிலிருந்து அணைந்த சிகரெட் துண்டு வந்து விழுந்தது. அவன் குடித்தது.
6.
சர்ச் பக்கமுள்ள நாய்கள் எப்படி என்று தெரியவில்லை.. இருந்தும் துணிந்து புளியமரங்கள் அடர்ந்த சரிவில் இறங்கினான்.
இதோ இப்ப வீடு வந்துவிடும்.. சுலபமாக உள் நுழைந்துவிடலாம்.. எந்த பிரச்சினையும் வராது என்பதாக பூனை போல முன்னேறினான். பின்பக்கம் நுழைவதே சரி என்றும் நினைத்துக் கொண்டான். எதற்கு போகிறோம் என்ற எண்ணம் அற்றவனாயிருந்தான்.
ஜன்னல் வழியாக பார்த்தான்.. சன்னமான வெளிச்சத்தில் இரண்டு கரிய உருவங்கள் கட்டிலில் கிடப்பது தெரிந்தது. கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். சுவாசிக்க திணறலாக இருந்தது. திரும்பி சுவரில் சாய்ந்து கொண்டான். சர்ச் முகட்டிலிருந்த சிலுவை தனிமையாய் துலங்கியது. அப்படியே அதையே பார்த்துக் கொண்டிருந்தான். தோளில் ஒரு தொடுகையை உணர்ந்தான். பயந்து திரும்பிப் பார்த்தான்.. அவள் நின்றிருந்தாள்..
"இங்க என்ன பண்றே" குரல் உடைந்து வசீகரமற்று மெல்லியதாய் இழைந்தது.
எதுவும் பேசாமல் சிலுவையைப் பார்த்துக் கொண்டான்.
"என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்க மனசுலே.........? மரியாதையா போயிடு....."
"....."
"கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. போயிடு.." என்ற குரல் கம்மியிருந்தது.
திரும்பி அவளைப் பார்த்தான்.. ஜன்னலிருந்து வீழ்ந்த சிறு வெளிச்சம் அவள் கண்களின் ஒட்டியிருந்த நீர்ப்படலத்தில் மினுங்கியது. டேவிட்டின் குறட்டை மெலிதாக கேட்டுக் கொண்டிருந்தது.
அவள் கண்களையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.. நேரம் கழிவது உணர முடியாதாய் இருந்தது. மனதுள் ஏனோ பயமாய் இருந்தது. அமைதியாய் அவள் வீட்டை விட்டு வெளியேறினான்.
7.
இரவு இன்னும் மிச்சமிருந்தது.. திரும்ப நடக்கையில் அவள் நீண்ட நேரம் தன் முதுகையே வெறித்துக் கொண்ருப்பதாக உணர்ந்தான். அம்மா முதல் எல்லா பெண்களும் நினைவில் வந்தார்கள்.. ஏனோ அவன் அம்மா மேல் ஒரு வாஞ்சனையை இப்போது உணர்ந்தான். மனதுள் புதிதாக ஒரு வெறுமை, இது வேண்டாம் என்பதாக அவனை வற்புறுத்தியது. சர்ச்சின் கேட்டைத் தாண்டி உள்ளிருக்கும் புளியமரத்தில் தூக்கு மாட்டிச் செத்துப் போவதென முடிவெடுத்தான். புளிமரத்தடியில் உள்ள பெஞ்சில் அமர்ந்து ஒரு சிகரெட் பிடித்தான்.
அண்ணாந்து தனிமையான சிலுவையைப் பார்த்தான். பக்கத்திலுள்ள டேவிட் வீட்டு ஜன்னல் பக்கம் அவள் இப்போது அங்கு இல்லை. இங்கு வேண்டாம் என்று தோன்றியவனாக.. சர்ச்சை விட்டு வெளியேறினான்.
சரிவில் மேலேறும் போது காணக்கிடைத்த இரண்டாவது புளியமரம் ஏறச் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது. சிகரெட்டை அணைத்து விட்டு மரமேறினான். கைலியை கிழித்து கயிறாக்கி கழுத்தில் மாட்டிக் கொண்டான்.. கைலி புதுசு அறுந்திடாது என்று நம்பினான்... இன்னொரு முனையை இறுகக் கிளையில் கட்டிவிட்டு மெதுவாக கீழே இறங்கித் தொங்கி ஊசலாடினான் குணா. அப்போது, அவள் பேர் என்னவாயிருக்கும் என்பதே அவன் கடைசி நினைவாக இருந்தது!
கொஞ்ச நிமிடங்களில் அந்த பக்கத்து ரோட்டில் விர்ரென்று விரைந்து கடந்தது 1 மணி பேருந்து - நில்லாமல்.
Sunday, November 22, 2009
ஒன்றரைக் கண் ரைபிள்!
பெரிய பெரிய கட்டிடங்கள்... பளபளக்கிற கண்ணாடித் திரை.. கசங்கலாக தெரிகிற நம் முகங்கள் கூட அதில் அட்டகாசமாகத்தான் இருக்கின்றன.
சுமார் 100 ஸாப்ட்வேர் கம்பெனிகள், அறிவு சொட்டும் முகத்தோடும் - காற்றில் பறக்கிற மிடிகளுமாய் திரிகிற தேவதைகள், சாதாரணமாய் தெறிக்கிற ஐரோப்பிய செந்தேகங்கள், இவிங்க இங்க ஏன் என்று எனக்குள் துடிக்கிற சந்தேகங்கள், ஸ்மோக்கிங் ஸ்னோலில் கேரண்டியாக எப்போதும் கண்ணில் சிக்கும் ஒன்றிரண்டு chickகள் - நான் அவரசத்துக்கு தீ கடன் வாங்கி தம் பற்றிக்கொண்ட தீத்தேவதை பற்றி இன்னொரு சமயம் சொல்கிறேன்.. ப்ளீஸ்!
இது எந்த இடம்? ஐடிபிஎல்.. ஒயிட்ஃபீல்டு ரோடு.. பெண்களூரு!
ஐடிபிஎல்லில் நான் இருப்பது நேவிக்கேட்டர் பிளாக்கு! ஒண்ணுக்கு இருப்பதும் அந்த பிளாக்கிலுள்ள கிரவுண்ட் ப்ளோர் ரெஸ்ட் ரூமில்தான்.. கிட்டத்தட்ட க்ரவுண்ட் ப்ளோரிலுள்ள எல்லாக் கம்பெனிகளுக்கும் பொதுவான (ப்ளஸ் செக்யூரிட்டிஸ், ட்ரைவர்கள்) கழிப்பறை. எப்போதும் சன்னமான கரோக்கீ ஒலித்துக் கொண்டிருக்கும் மினுமினு இடம்.. அந்த இசையைக் கேட்கும் போது என் மனசு.. "ஏஸி வச்ச பாத்ரூமில் என்ன வரும் போங்க" என்று மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொள்கிறது.
எப்போதும் போல்தான் அன்றும் ஒண்ணுக்கடிக்கப் போனேன். யூரினலில் பீச்சி விட்டு வந்து வாஷ்பேஷனில் கைக்கழுவி விட்டு நிமிரும் போது..
"சார்.. அவரு உங்களுக்குத் தெரிஞ்சவரா?" என்று ஒரு கட்டைக் குரல் - கன்னடத்தில்.
யாரென்று பார்த்தால்.. ரெஸ்ட் ரூமைக் கிளீனாக வைத்துக் கொள்ளப் பணிக்கப் பட்ட க்ளீனர்...ஒரு நாளைக்கு 10 மணிநேரம் அந்த டாய்லட் + யூரினல்கள் நிரம்பிய இடத்தை தன் ஆபிஸாகக் கொண்டு ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பவர். பேர் தெரியாது. அப்போது என்று நான் ஒருவன் மட்டும்தான் அங்கு.
"யாரு?" என்றேன்
"இதுக்கு முந்தி வந்திட்டுப் போனாருல்ல.. கொஞ்சம் குண்டா.."
இந்த மாதிரியான விசாரிப்புகள், பேட்டிகள் எனக்கு கொஞ்சம் புதுசு.. இருந்தும் கவனமாக அவருடன் பேச முற்பட்டேன்.. ஆப்டர் ஆல் அவரைவிட 2 மணிநேரம் கம்மியாக வேலைப் பாக்கிற ஆளுதானே நானு.
"குட்டையா இருந்தவரா?"
"ஆமா.. குட்டையா.. குண்டா"
"சிவப்பா.. வழுக்கையாவும் இருந்ததா?"
இப்போது அவருக்கு உற்சாகம் பற்றிக் கொண்டு விட்டது.. கண்களில் திருப்தி கொப்பளிக்க..
"ஆமா சார்.. அவருதான்.. அவர்கிட்ட சொல்லி வைங்க"
ஙே என்று முழித்துக் கொண்டே,
"என்னன்னு?"
"சார்.. அவரு கரெக்ட்டா ஒண்ணுக்கு அடிக்க மாட்டேங்கிறாரு.."
ஙே.. ஙீ.. ஙெள.. என்று எல்லாமாக முழிக்க வேண்டியதாயிற்று..
"என்னது????"
"ஆமா சார்.. அவரு கரெக்ட்டா பேசின்ல விட மாட்டேங்குறாரு"
".."
"ஒண்ணு சுவத்தில அடிச்சிடறாரு.. இல்லீனா.. கீழே தரையில அடிச்சி விட்டுடறாரு"
"......??"
"அவரு வந்துட்டுப் போன பின்னாடி.. நான் ஒவ்வொரு தடவையும் அதை க்ளீன் பண்ணவேண்டியதா இருக்கு சார்.."
"யாரு சிவப்பா... குண்டா.. குள்ளமா.. வழுக்கையா இருந்தவரா?"
"அட ஆமா சார்.. அவரேதான்... எப்ப வந்தாலும் இப்படியே சிந்திட்டுப் போயிடறாரு.. எனக்குதான் வேலை"
"...ம்...?"
"நீங்களே இங்க வந்து பாருங்களேன்..." என்று அந்த பாதிக்கப்பட்ட யூரினலை நோக்கி சுட்டிக்காட்டிவிட்டு,
"அவருகிட்ட கொஞ்சம் சொல்லிடுங்க சார்.. இந்த மாதிரியெல்லாம் ஆகுதுன்னு.. "
"நானா??"
"ஆமா சார்.. இப்ப நீங்கெல்லாம் வர்றீங்க.. எவ்வளவு டீஸன்டா வந்துட்டு, இருந்துட்டுப் போறீங்க.. நீங்க ரொம்ப நீட்டு சார்.."
எதுவும் சொல்ல முடியாமல் சிரித்து வைத்தேன்.
"அவருகிட்ட சொல்லி வைங்க சார்"
".... அது முடியாதே..?"
"ஏன் சார்...??"
"அவருதான் என் மானேஜர்"
என்று ஜிப்பைப் இழுத்து விட்டுக் கொண்டு வெளியேறினேன்.
Monday, November 16, 2009
சனி - 2012 - பான்டலூன் - மீந்த குவாட்டர்!
அதுவும் நல்லாத்தான் இருக்குவோய்!
ஆகவே, காலடியும் ஒரு மிக்ஸிங் போடுகிறது...!சனி:
ஆமாப்பா ஆமா... இன்னிக்கு சனிதான். ஆபிஸு லீவு. ரெகுலரா சாட்டிங்கு வர்ற ப்ரண்டுக்கு இது தெரியும்.. ஸோ, வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பிச்ச கூகிள் அரட்டை சனிக்கிழமை காலை 4 மணி வரைக்கும் சந்தோஷமா நீடித்தது! நான் வேறு
அவசரப்பட்டு வெள்ளியன்றே 2012 படத்துக்கான டிக்கெட்டை முன்பே புக்கிவிட்டிருந்தேன். சனி காலை 10 மணிக்கு ஸிக்மா
மால் - ஃபன் சினிமாஸ். கொலீக்கைத் துணைக்குக் கூப்பிட்டேன்: ஒஸ்தாரா என்று. அவளோ ஸாரி மச்சான் என்று எஸ்கேப்பிவிட்டாள்! அதுவும் நல்லதுக்குதான்!!
காலையில் 7 மணிக்கு அலாரம வைத்துவிட்டு சரியாக 9 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். கன்னிங்ஹாம் ரோட்டில் உள்ள ஸிக்மா மால் நம்ம வீட்டிலிருந்து 10 நிமிடந்தான்... இருந்தாலும் அதுக்கு முன்னாடி இன்னொரு கடமை இருக்கே!
சனி விரதம்! பக்கத்திலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று, அங்குள்ள நவக்கிரகங்களுக்கு எள் விளக்கு ஏற்றி 3 சுற்று சுற்றி சாமி கும்பிட்டு விட்டுதான் அடுத்த வேலை!
2012:
வேகமாக குளித்து விட்டு (லேசாக மப்பு வேறு - நேற்று அடிச்ச சரக்கின் வாசமும்... அடப்பாவி நேத்தும்(!) மப்புலதான் என்கூட சாட் பண்ணிக்கிட்டிருந்தியா, கொலைகாரா, குடிகாரா என்று திட்டும் ப்ரண்ட்டுக்கு, ஐம் ஸாரி!) கிளம்பினேன்... சனீஸ்வரைச் சுற்றிவிட்டு பைக்கை கிளப்பினேன்.. 9:50 AM.
சிவானந்தா சர்க்கிள் - ரேஸ் கோர்ஸ் - கன்னிங்ஹாம் ரோடு - ஸிக்மா மால் - பார்க்கிங் - டீஸ்களில் திரியும் தேவதைகள் - டிக்கெட் கவுண்டர் - பாக்ஸ் ஆபிஸுக்கு வழிதேடும் அவரசக்காரர்கள் - ஸ்க்ரீன் நம்பர் 3 - I3 - டார்ச் வெளிச்சம் தடவிய வளைவுகள் என்று சீட்டில் அமரும் போது 2012 படம் ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆகியிருக்கலாம்.
பக்கத்தில் ஆம்பிளை!
படத்தைப் பத்தி விமர்சனம் பண்ணமாட்டேன் - பயப்படாதீங்க! இந்நேரம் நம்ம டைகர் பதிவர்கள் வரிஞ்சு கட்டிக்கிட்டு 2012ஐ அக்கு வேறு ஆணிவேறாக பிரிச்சி தள்ளியிருப்பாங்க - போய் பாத்துக்கோங்க.
தியேட்டரை விட்டுக் கிளம்பினேன். 2வது ப்ளோரில் குழந்தைகள், அம்மாக்கள் கூட்டம் காரிடாரில் எல்லாம் நிரம்பி வழிந்தது.
குழந்தைகள் தரையில் அமர்ந்து படங்களாக வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நேரம் படங்களையும் அம்மாக்களையும் வேடிக்கை பார்த்து விட்டு கிளம்பினேன். பசி வேறு!
பான்டலூன்ஸ்:
ஒன்றாம் ப்ளோரில் இருந்த பான்டலூன்ஸ் என்னை வா வா வென்றது. மணி 1:40 PM. பசிகிடக்கிறது என்று கடைக்குள் நுழைந்தேன்.
அவர்கள் அனுப்புகிற மெயில்களும், போனமுறை செய்த பர்ஸேஸுக்கு கொடுத்த க்ரீன் மெம்பர்ஷிப் கார்டும் கூட காரணமாயிருக்கலாம். காரணங்கள் எதுவுமின்றி கவர்ச்சிக்காக மட்டும் ஷாப்பிங் செய்கிற ஜீனை நமக்குள் விதைத்த சாமார்த்தியத்துக்கு விளம்பரதாரர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!
உள்ளே நுழைந்து ட்ராக் பாண்ட்ஸ், டீஸ், கார்கோஸ், ரோலர் ஸ்லீவ்ஸ் (இதுதான் இப்ப என்னுடைய ஃபேவரிட் - 6 சர்ட்ஸ் இருக்கு), இன்னர்வேர், என்று கொத்தாக அள்ளிக்கொண்டு கெளண்டரில் வந்து மெம்பர்ஷிப் கார்டையும், 200 ரூபாய் வொர்த்துள்ள கூப்பனையும் நீட்டினேன். அந்த கன்னடத்துக் கிளி பார்த்துவிட்டு,
"கூப்பன் எக்ஸ்பைரியாடிச்சே" என்றாள்
"ம், பரவாஉண்டு.. மெம்பர்ஷிப் கார்டுக்கு எதுவும் டிஸ்கெளன்ட் உண்டா?" என்று பல்லிளித்தேன்."பாக்கிறேன்......... ஸார்.. டிஸ்கெளண்ட் இருக்கு.. ஆனா இப்ப இல்ல அடுத்த முறை நீங்க ஷாப்பிங் பண்ணும் போது 10% வரைக்கும்..." என்று வரும்ம்ம்ம்...ஆனா வராது ராகத்தில் இழுத்தாள்.
"இல்லியே.. இந்த முறை பர்ஸேஸ் பண்ணுனா 5% ஆபர்ன்னு எஸ்எம்எஸ், ஈமெயில், பீமேல் எல்லாம் வந்துச்சே???""ஓ! அதுவா.. அது வெள்ளிக்கிழமை ஷாப்பிங் பண்ணுனா மட்டும்தான்""இன்னிக்கு கிடையாதா? என்ன ஒரு நாள்தானே தள்ளிப்போயிருக்கு? எனக்கு கொடுங்க 5% தள்ளுபடி" என்று அடம் பண்ணினேன்."இல்லே.. அது வெள்ளி மட்டும்தான்"
"அப்ப நான் வேணா அடுத்த வெள்ளிக்கிழமையே வந்து வாங்கிக்கட்டுமா? இப்ப அந்த தள்ளுபடியை கொடுக்கிறதில என்ன தப்பு இருக்கு?" என்றேன் விடாப்பிடியாய்
அவளும் மானேஜரிடம் கேட்டுப் பார்த்துவிட்டு வந்து கைவிரித்து விட்டாள்.
"சரி.. அப்ப நான் ஃப்ரைடேவே வந்து வாங்கிக்கேறேன் - முடிஞ்சா" என்று கிம்பினேன் "ஏன்...?"
"வெட்டியா 5% இழக்கணுமா என்ன? இந்த துணிமணிக இல்லாம வர்ற வெள்ளிகிழமை வரைக்கும் உயிர் வாழலாம்னு நினைக்கிறேன்" TGI Fridays கூட்டமா நீங்க என்று கேட்கத்தோன்றியது. பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த நவீன மூளைச்சலவைக் கூடாரத்தில் என்று தப்பித்தால் போதும் என்று வெளியில் விரைந்தேன்.
மீந்த குவாட்டர்:
நேற்றுப் புதிதாய் டேஸ்ட் பாக்கலாம் என்று வாங்கிய Bols பிராண்டி நன்னாவே இல்லே போங்கோ. அதுவும் ஹாப் பாட்டில் வாங்கினேன். டேஸ்ட் பாக்கிறவனுக்கு எதுக்குடா ஹாப் பாட்டில் இடியட் என்கிறது மப்புக்கு பின்னான ஞானம்!!
வழக்கமாக சரக்கு எடுக்கிற ஸ்வஸ்திக் சர்க்கிள் பாரில் அந்த பிராண்டி ஃபுல் பாட்டில்ல இருந்து, ஹாப் பாட்டில் சரக்கை 2 குவாட்டர் பாட்டில்ல ஊத்திக் கொடுத்தாங்க.
ஸோ, அதிலேயே 15ml ச்சீட்டிங்! புரியாத, பூஸ்ட் குடிக்கிறவங்க ஹாப் பாட்டிலையும் குவாட்டர் பாட்டிலையும் வாங்கி படித்துப் பார்க்கவும்.
வெள்ளியிரவு ஒரு குவாட்டர் + கட்டிங்.. ஸோ சனியிரவு என்ன குடித்திருப்பேன்.... ? குவாட்டர் - கட்டிங்.
Monday, November 9, 2009
ஒரே கல்லு 2 மாங்கா!!!
மாங்கா 1:நினைவில் நனைதல்
தோப்புக்காரர்: பெரியண்ணன் சென்ஷி
நான் ஏன் பிளாக்குறேன் என்பதை விளக்கவும் இல்லை குழப்பவும் என்று இங்கு கல்லு வுட்ட சென்ஷிக்கு நன்றி!
நம்ம பஸ்ஸும் உங்க ரூட்டுத்தாங்க.. காமிக்ஸ் - அம்புலிமாமா - ராஜேஷ்குமார் - சுபா - ஓவியங்கள் - பாலகுமாரன் - குமுதம் - சுஜாதா - ஆனந்த விகடன் - இசை - லாசரா - குபரா - புல்லாங்குழல் - சுரா - யூமா. வாசுகி - சுப்ரபாரதிமணியன் - சிகரெட் - கல்லூரி - க. சீ. சிவக்குமார் - காமசூத்ரா - அழகியபெரியவன் - காதல்கள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஜெயமோகன் - கிளாமர் - காதல் தோல்விகள் - வாமு கோமு - சாரு நிவேதிதா - மனோஜ் - எஸ்.ரா - சரக்கு - வாந்தி - தலைநோவு....
சரி வுடுங்க.. ஆரம்பத்திலேயே கவனிச்சிருக்கணுங்கிறது இப்பத்தான் புரியுது.
அண்ணர்-நண்பர் க.சீ. சிவக்குமாருடன் ஆன நட்பு புதிய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் ஓசி குடியையும் புத்தக வெளியீட்டுக்கப்பாலான மொட்டை மாடி சபாக்களையும் அறிமுகப்படுத்தியது.
கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்தபோது.. என் அறையில் கொஞ்சம் புத்தகம், நிறைய பிரஸ்கள், கொஞ்சம் புல்லாங்குழல் என்ற வாழ்ந்து வந்தேன். ஓவியங்களில் கோடு பற்றியே நல்ல சிறுகதைகள், நாவல்களை கண்டடைந்திருக்கிறேன். சந்தானத்தின் கோட்டோவியங்கள், ட்ராஸ்கி மருதுவின் அப்ராஸ்ட், சந்ருவின் கிறுக்கல்கள், எபினேசரின் சார்க்கோல், மனோகரின் வண்ணங்கள், ம.செவின் மங்கலான நீரோவியங்கள்.. இப்படி படங்களைப் பற்றித்தான் இலக்கியம் பக்கம் வந்த வழிதவறிய காட்டாடு நான்.
இங்கு வலைப்பதிவு எழுத வந்ததுக்கு காரணம்.. இது ப்ரீன்னு சொன்னாங்க!!! முதலில் படிக்க வந்ததும்.. இந்த கிரவுண்ட் நல்லாத்தான் இருக்கு என்று இம்ம்ம்மீடியட்டாக நானும் ஆரம்பித்துவிட்டேன் காலடி வைக்க!
காலடி ஒரு அளவு, பதிவு, மற்றும் அடையாளம். மிக முக்கியமாக உயிர்த்தன்மை நிறைந்த உருவம். அதன் எளிய உருவத்தில் புதைந்து போய் இளைப்பாறப் பிடித்திருக்கிறது!
முக்கியமாக ஒன்று.. காலடி என்பதுதான் வலைப்பதிவு. ஜெகநாதன் அல்ல. நீங்களும் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்தான் - ஜெகநாதனுக்கு அல்ல!!! நான் இந்த காலடியின் ஒரு ஊழியன் அவ்வ்வளவே!
(')
மாங்கா 2: பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்
தோப்புக்காரர்: ஜெய்ஹிந்த்புரம் பீர்
1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: படித்த அரசியல்வாதிகள்
பிடிக்காதவர்: பழுத்த அரசியல்வாதிகள்
2. எழுத்தாளர்
பிடித்தவர்: சுப்ரபாரதிமணியன்
பிடிக்காதவர்: டுமிதுல் சுயம்போ என்ற ஆப்ரிக்க நாட்டு எழுத்தாளன் (மேலும் டீட்டேலுக்கு என் முதல் பதிவைப் பார்க்கலாம்)
3. கவிஞர்
பிடித்தவர்: யூமா. வாசுகி
பிடிக்காதவர்: அப்படி யாரும் கிடையாது. இவ்விடத்தில் ஒரு அறிவிப்பு: கவிஞ பெருமக்கா.. உங்களை யாரும் பிடிக்கலேன்னு சொன்னா கவலைப் படாதீங்க... உடனே நம் காலடியின் கவிதை பட்டறையில் பங்கேற்று, கவிஞர் அடையாள அட்டையும் பெற்றுக் கொள்ளவும். உங்களை பிடிக்காது என்று சொன்னவர்கள் மேல் ஆஸிட் அல்லது நீங்களே எழுதிய கவிதைப் புத்தகம் வீசப்படும்!
4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: சாம் ஆண்டர்சன் பட இயக்குநர்
பிடிக்காதவர்: என் பிடிச்ச டைரக்டரு பார்த்த பின்னாடியும் எப்படி இந்த கேள்வி கேட்கத் தோணுதுங்க??
5. நடிகர்/கை
பிடித்தவர்: வினு சக்ரவர்த்தி / காந்திமதி
பிடிக்காதவர்: இதுவும் தப்பான கேள்வி
6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: நரேன் கார்த்திகேயன்
பிடிக்காதவர்: ஒரு விளையாட்டே எனக்கு பிடிக்காது - கிரிக்கெட்!!
7. தொழில் அதிபர்
பிடித்தவர்: Subroto Bagchi, Chief Operating Officer, MindTree
பிடிக்காதவர்: இருட்டு பைபாஸ் ரோடுகளில் லாரிகளை மறிக்கும் 'தொழில்' அதிபர்கள்!
8. மதத் தலைவர்
பிடித்தவர்: யாருமில்லை
பிடிக்காதவர்: மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோரும்
9. மருத்துவர்
பிடித்தவர்: ஊசிப் போடாதவர்
பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்
10. வலைபதிவர்
பிடித்தவர்: ஹலோ... ஹலோவ்வ்வ்வ.. இங்க டவர் சரியா இல்லீங்க..!
பிடிக்காதவர்: ...ஆங்.. நான் அப்புறமா பேசறேங்க....!