Tuesday, April 19, 2016

கிட்டுவின் வார்த்தை வங்கி

jaganathank.blogspot.in

எனக்கு ஒரு கிராமத்து மாமா இருந்தார். கிட்டு என்று அழைப்பார்கள். ஒரு பத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்து சொந்தம் என சொல்லலாம். ஒருசமயம் பள்ளி விடுமுறையில் அங்கு போகும்போது வித்தியாசமான வேலை ஒன்று கொடுத்தார். மிக இனிமையாக, தந்திரமாக பேசி எப்படியோ என்னை சம்மதிக்கவும் வைத்துவிட்டார்.

'ஏம்பா, நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீ நல்லாப் படிக்கிற பையன்கிறதாலதான் உங்கிட்ட இதைச் சொல்றேன்...'

'ம், சொல்லுங்க'

'ஒரு ரூல்டு நோட் எடுத்துக்கோ. அதில அ - போட்டுட்டு அதுக்கு கீழ அ-வில் தொடங்குகிற 50 வார்த்தைகள்... ஆ போட்டுட்டு அதில ஒரு 50.. இப்படியே உயிரெழுத்து முடிச்சிட்டு அப்புறம் உயிர் மெய்யெழுத்துக்கும் எழுதிடு'

'எல்லா உயிர்மெய்யெழுத்துமா?'

'ச்சே​சே.. எல்லாம் வேண்டாம்பா. க, ச, த, ந, ப, ம, ர, வ இது மட்டும் போதும் ஏதாவது கதைப்புத்தகம், நாவல், நியூஸ் பேப்பர் இதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையா எடுத்து எழுதினா ஈஸியா ஒரு வாரத்தில முடிச்சிடலாம்'

'ஓ!!'

'ஆமா.. க-ன்னா, அப்படியே கா, கி, கு, கெ இப்படி ஒவ்​வொரு வரிசையிலும் ஒரு 50 வார்த்தைகள் இருந்தா போதும்'

'ஆமா, எதுக்கு இதெல்லாம்?'

'நான் சினிமால வசன கர்த்தா ஆகறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு வாய்ப்பு கூட கிடைச்சிருக்கு. என்ன படம்னு உனக்கு அப்புறமா சொல்றேன். நீ எழுதித் தரறது எனக்கு ஒரு வார்த்தை வங்கி மாதிரி பயன்படும். ஏதாவது சீனுக்கு வசனம் எழுதும் போது கி-யில் இல்ல சி-யில் ஆரம்பிக்கிற வார்த்தை வேணுங்கிறப்ப இதை எடுத்து பார்த்துப் பயன்படுத்திப்பேன். மறக்காம எழுதி முடிச்சிடு. என்ன?'

ஆவ் என்று எனக்கு வந்தது.

பிறகு 80 பக்க நோட்டும் பேனாவுமாக சுற்றும் போது, அந்த ஊர் பையன்கள் சிலர் என்னைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ம்! கிட்டு இப்படி பல பேரை ஏற்கனவே பணிக்கு அமர்த்தி தன் வார்த்தை வங்கியைப் பலப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது.

அடுத்த வார​மே ​தேடிக்​கொண்டுவந்து ​விசாரிக்கவும்​ செய்தார்.​

'கு-வரைக்கும் வந்துவிட்டேன். இன்னும் ஒரு வாரம் வேணும்'

'குட் குட் வெரிகுட்! நிறைய புக்கெல்லாம் ரெபர் பண்ணு. வேணும்னா நம்ம ஊர் லைப்ரரியில் புக்ஸ் எடுத்துக்கோ. கிட்டு சொன்னார்னு சொல்லு'

அப்படியே கண்களை ஆகாயத்துக்கு செலுத்தி, விரலைச் சொடுக்கி யோசிப்பார்..

'கு, கூ, கெ அதுக்கப்புறம் சு, சூ, செ.. ​ரைட்! முடிச்சிடலாம் முடிச்சிடலாம்'

அப்போது அவர் கண்களில் குத்திப் பார்த்த இட்லி இன்னும் இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும் போன்ற நம்பிக்கைச் சுடரும்.

அப்படியே மேலும் சில விதிகளையும் விளக்கிச் சொன்னார் கிட்டு. அதாவது பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டுமாம். ஆனால் ஒவ்வொரு எழுதுக்கும் 50 வார்த்தைகள் என்பதில் கறாராக​வே இருந்தார்.

இப்படி தினமும் எதிர்படும் போதெல்லாம் நச்சியதில் ஒருவழியாக முடித்து அடுத்த வாரத்தில் கொடுத்தேன். சாயுங்காலத்தில் மங்கலான தெருவிளக்கின் கீழ் அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டு பக்கம் பக்கமாக புரட்டினார்.
முகத்தில் இட்லி சரியாக​ ​வெந்துவிட்ட​தே ​போன்ற திருப்தி படர்ந்த மாதிரி இருந்தது.

'வெரிகுட் நல்லா செஞ்சிட்டே. எனக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தை தேவைப்படுது - அதாவது ஜ, ஷ, ஸ இப்படி ஆரம்பிக்கிற வார்த்தைகள். அப்புறம்.. விடுபட்டுபோன சில உயிர்மெய்களிலும் சிலதுகளையும் நீ கவர் செய்யலாம். உதாரமணா கோ, கெள, தோ, தெள இந்தமாதிரி...'

அந்த ஊருக்கு போவதையே விட்டுவிடலாமா அல்லது தமிழிலிருந்து ​வேறு ​மொழிக்கு மாறிவிடலாமா என்றிருந்தது.

சரி - நம் கண்ணெதிரே ஒரு வசனகர்த்தா உருவாகி, நாம் தயாரித்துக் கொடுத்த வார்த்தை வங்கியை பிரித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு வசனத்தை உருவாக்கி, அதை திரையில் ஒரு நடிகரோ நடிகையோ பேசிக் கேட்கும் போது நமக்கும் ஒரு பெருமைதானே என்று அடுத்த அ​​ஸைன்​மெண்டுக்கும்  ஒத்துக்கொண்டேன். அவரிடம் இப்படி அஸைன்மெண்ட் வாங்கிய பல சிறுவர்களின் நான்தான் முதன்மை என்று பாராட்டுப் பத்திரம் வேறு.

அதற்கப்புறம் அவர் என்னிடம் எது பேசினாலும், இவர் பேசுகின்ற இந்த வாக்கியத்தை நான் எழுதிக் ​கொடுத்த வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்துக் கொண்டு பேசுகிறாரோ என்று படும். கிட்டு சில காலங்களுக்கு பிறகு என்னிடம் வார்த்தை வங்கி தயாரிக்கப் பணிப்பதில்லை. வேறு யாரிடமும் கேட்டதில்லை. சில பல 80 பக்க நோட்டு வார்த்தை வங்கிகளோடு வசனம் எழுத அமர்கிற நபரைப் பார்த்து தமிழ் சினிமா பயந்து மறுத்திருக்கக் கூடும்.

​மொத்தமாக தமிழ் வார்த்​தைக​ளை மட்டும் பயன்படுத்துகிற வசனகரத்தா​​வே ​தே​வையில்​லை என்றும்கூட தமிழ் சினிமா நி​னைத்திருக்கலாம்.

நான் எழுதிக் கொடுத்த கிட்டுவின் முதல் வார்த்தை வங்கி என்னவாயிற்று என்று அதற்கப்புறம் கேட்டதில்லை. எனக்கும் ஒரு விசனம்தான். பாருங்க​ளேன், தமிழ் பேசும் சினிமா நாயகர்களுக்கோ நாயகிகளுக்கோ என் வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்து வரும் வசனத்தை பேசும் பாக்கியம் இல்லாமலேயே போய்விட்டது!

Friday, April 8, 2016

எட்டாம் எண் செருப்பு


திருமணத்திற்கு முன் மனைவி 'எனக்கு தூசு என்றாலே ஒவ்வாது, டஸ்ட்-அலர்ஜி' என்று அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஆஹா, இவர் வீட்டில் ஒரு மயிரிழை அளவுக்கு ஒட்டடை தெரிந்தாலும் ​பொறுக்காது பாய்ந்து சுத்தம் செய்துவிடுபவர் போல என்று பெருமையாக எண்ணிக்கொள்வேன். தி.பின்தான் தெரிந்தது தூசு என்பது அல்ல அதை சுத்தம் செய்வதுதான் அம்மணியாருக்கு அலர்ஜி என்று. தன் உடலைச் சுற்றி சிலந்தி வலைப் பின்னியிருந்தாலும் அதை தன் சொந்தக் கைகளால் அகற்றமாட்டார் - டஸ்ட் அலர்ஜி!

இதற்கு நேரெதிராக, ஊரில் பெற்றோர்கள் என்ன பண்டிகை வரும் எப்படி வீட்டிற்கு வெள்ளையடிக்கலாம் என்ற கணக்கிலேயே காலண்டரையும் வீட்டின் சுவர்களையும் தடவிக் கொண்டிருப்பார்கள். காலண்டர்கள் இளைக்க இளைக்க வீட்டின் சுவர்கள் சுண்ணாம்புப் பூச்சால் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒருவேளை தங்களின் பலத்தை ஒவ்வொரு வருடமும் சோதித்துக் கொள்ளும் பண்பாக வெள்ளையடித்தல் இருக்குமோ என்னவோ.

சுத்தம் என்பது என்ன?

அழுக்கை அகற்றுதல் - வாழத் தகுதியாக இருப்பிடத்தை பேணிக் கொண்டேயிருத்தல். இப்போது வீட்டில் இருப்பதைவிட இண்டர்நெட்டில் இருப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அங்கும் ஏகப்பட்ட தூசு, குப்பை அப்புறம் தே.இ. ஆணிகள். இன்பாக்ஸில் தேவையில்லாத மின்னஞ்சல்கள் (ஸ்பேம்) ஒட்டடைக் கட்டிக் கொண்டேயிருக்கின்றன. ஏன் இந்த மெயில் தினம்தினம் நமக்கு வருகிறது என்று யோசித்து முடிப்பதற்குள் அடுத்த மெயிலும் வந்துவிடுகிறது. இணைய வேகம்! பொறுப்பாக சென்று இது எனக்கு வேண்டாம் என்று சந்தாவிலக்கம் (unsubscribe) செய்தாலும் அதிலும் ஏதாவது செக்மார்க் வைத்து திரும்பவும் இன்பாக்ஸூக்குள் வந்துவிடுகிறார்கள். இதில் திரும்ப திரும்ப நம் கவனத்தை குவித்து நமக்கு தேவையேப்படாத பொருளை விற்றும் விடுகிறார்கள்.

அப்படி சமீபத்தில் வாங்கிய சப்பாத்து காலணி (shoes) ஒன்று காலைக் கடிக்கிறது. காலை மட்டுமல்ல காசையும். இதில் முதலில் வந்த அளவு பெரிதாக இருந்ததால் திருப்பி அனுப்பி - ஒரு அளவு குறைவாக எட்டு அளவில் வேறு ஜோடி வாங்கினேன். இரண்டே நாளில் அதன் விலையை 200 ரூபாய் கூட்டிவிட்டார்கள். எட்டாம் எண் அளவில் பாதம் வைத்திருப்பதற்கான தண்டனை போலிருக்கிறது!

யாரோ ஒருவருக்கு அல்லது நிறுவனத்துக்கு இத்தனை பலம் இருக்கிறது - தினமும் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப, அதில் உங்கள் கவனத்தைக் கோரும் விதமாக வடிவமைக்க, அயராமல் உங்களைத் தொடர அப்புறம் உங்களை ஒரு பொருள் வாங்க வைக்க என ஒரு பெரும் திட்டமிட்ட அணுகுமுறை இதில் ஒளிந்து இருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க, இதையேதான் நாம் பிற ஊடகங்களிடமிருந்தும் பெறுகிறோம். தொடர்ச்சியாக நீங்கள் படிக்கும் பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி அல்லது வலைத்தளம் எதுவென்று சொல்லுங்கள் - நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு ஊடகதந்திரங்களால் சூழப்பட்டுக்கிடக்கிறோம்.  வாக்களிக்கப் போவதற்கு முன் சில ஒட்டடை வேலைகள் நம் உள்மனதுக்குள்ளும் செய்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று இந்த தேர்தல் அவசரம் சொல்கிறது.

எட்டாம் எண் செருப்பு சில தினங்களுக்கு காலை உறுத்தும் - பொறுத்துக் கொள்ளலாம் அப்புறம் பழகிவிடும். ஐந்தாண்டுகளும் உறுத்துகிறமாதிரி நம்மை ஏதும் 'ஆர்டர்' செய்ய வைத்துவிடுவார்களோ என்று ஊடகங்கள் மேல் பயமாகவேயிருக்கிறது.

Monday, April 4, 2016

மூன்று தர்பூசணிகள்

தேவைகள் குறையுமளவுக்குத் தெய்வத்தன்மை பெறுகிறோம். யார் சாக்ரடீஸ் சொல்லியதா? மறந்துவிட்டது.

அலுவலக நண்பர்களில் பலர் இப்படித் தெய்வத்தன்மை பெற்றவர்களாய் தெரிகிறார்கள். மதிய உணவு வேளையின் போது நண்பர் ஒருவர் கொஞ்சம் வயிறு சரியில்லை என்று முறையிட்டார். எல்லோரையும் ​போல என் பங்குக்கு ஒரு கைவைத்தியம் சொல்லி​ வைத்​தேன். காலையில் நெல்லிச்சாறு குடித்தால் வயிறு சுத்தமாகும் என்று. வயிற்றுவலிக்காரர் தடக்கென்று நிமிர்ந்து கொண்டார்: 'ஏன் சாறு பிழிய வேண்டும்? அப்படியே கடித்துக் கடித்துத் தின்னவேண்டியதுதானே? தேவையில்லாத மின்விரயம்!' என்றார். அதுவும் சரிதான் - நெல்லியைக் கத்தியால் நறுக்குவது, மிக்ஸியில் அரைப்பது, வடிப்பது அப்புறம் அதன் தோலை உபரியாக்குவது போன்ற கார்பன் காலடிகளைத் (Carbon Footprint) தவிர்த்து விடலாம்தான். வயிற்றுவலியையும் மீறிய நண்பரின் தெய்வத்தன்மை அன்று புலப்பட்டது.

இன்னொருவர் இருக்கிறார். பாசமாக என்னை 'நீ என் நண்பேன்டா' என்று வாரிக்கொண்டாலும். அவர் என்னிலும் மூத்தவர். பணியிலும் இருபடிகள் மேலிருப்பவர் (இதுவே அவரின் தெய்வத்தன்மை எனக்கு உணர்த்த போதுமானதுதான்) அவரின் சிறப்புகளில் ஒன்று: வெறுங்காலில்தான் ஓடுவார் - சாதாரணமாக ஒரு முழு மராத்தான் அளவுக்கு - அதாவது 41 கிலோமீட்டர்கள். காலணிகள் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒருமுறை காலில் உள்ள ஆணிகளை காட்டினார், வெற்று பாதங்களில் ஓடுவதால் ஏற்பட்டனவாம். திருவல்லிகேணியிலிருந்து பெருங்குடியிருக்கும் அலுவலகத்திற்கு தினமும் பறக்கும் ரயிலில் பாதச்சோடுகளோடு வருவார் போவார்.

இதன் காரணமாகவே அவரின் கார் பலமாதங்களாக அசையாமல் திருவல்லிகேணியைத் தாண்டாமல் சென்னை மாநகரின் தூய்மைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் பாருங்கள், அதை எப்போதாவது இயக்கும் வேளையில் அதன் மின்கலம் தீர்ந்துபோய் கார் அசைய மறுக்கும். இது அடிக்கடி நடப்பதால் 'ஏம்பா வீட்டிலேயே வச்சுக்கிற மாதிரி ஒரு ஜம்ப் ஸ்டார்ட் பாட்டரி கிடைக்குமா?' என்று கேட்டார். அடடே! காரை அசைக்காமல் வைத்திருப்பதற்கு கூலியாக தனியாக ஒரு மின்கலம் தேடுகிறாரே? இவர் தெய்வத்திண்ட தெய்வம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

தேவைகளைச் சுருக்குவது என்பது கவனம் கூடிய திட்டமிடப்பட வேண்டிய செயலாக இருக்கிறது. சுருக்கிக் கொள்வதின் முதல் அடி என்னவென்றால் உங்களுக்கு அந்த அதிகாரம் இருக்க வேண்டும். சரி நமக்கும் கொஞ்சமாவது தெய்வத்தன்மை அல்லது சிறுதெய்வத்தன்மை அதுவும் கூட இல்லாவிட்டால் ஒரு பூசாரித்தன்மையாவது வாய்க்கட்டுமே என்று குறைக்கும் அந்தஸ்துள்ள என் தேவைகளை நோட்டமிட்டேன். கார் பயன்பாடு கட்டுப்படுத்துவது.. ஆனால் தனியாக மின்கலம் வாங்கி மின்னேற்றும் சக்தி கிடையாததால் கார்-பகிர்வு முறையில் (car pooling) அலுவலகம் சென்று வருகிறேன். ஏஸி, மின்விசிறி, சோப்பு, பவுடர் இதெல்லாம் நமக்கு தேவையே இல்லீங்கோ என்று ஹீலர் பாஸ்கர் சொன்னதைக் கேட்டு அதையும் முயன்று பார்த்தேன். வீட்டில் என்னை ஒரு காட்டேரி அந்தஸ்துக்கு சுருக்கும் நிலை ஏற்பட்டதால் இந்த பூசாரித்தன்மை வாய்ப்பும் பறிபோனது!

இருந்தும் அவரவர் திறமைக்கேற்ப தன்னை ஒரு சாதாரண எளியனாக்கிக் கொள்ளும் முனைப்புகளைப் பார்த்து வியக்கிறேன். தெய்வத்தன்மையை விடுங்கள் உலகத்துக்கு நாமளிக்கும் கார்பன் சதவீதத்தைக் குறைத்துக் கொள்ளும் முனைப்பே இதில் முக்கியம்.

இன்னொரு அலுவலக நண்பர் - வாரக்கடைசியில் விவசாயம் செய்கிறவர். அதுவும் இயற்கைமுறை விவசாயம். வீக்என்ட் விவசாயி என்று சொல்லலாம். இதற்காக அவரும் அவர் நண்பர்களுமாக சென்னையிலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலுள்ள கிராமத்துத் தோட்டத்துக்கு காரில் பயணித்து, அங்கு சென்று தோட்டப்பணிகளை முடித்துவிட்டு திரும்பவும் 100 கிமீட்டர்களில் சென்னை திரும்புவர். சமீபத்தில் பயிரிட்ட தர்பூசணிகளும் முள்ளங்கிகளும் விளைந்து விட்டன. அவை முறையே இயற்கை-தர்பூசணி மற்றும் இயற்கை-முள்ளங்கிகள் என்று பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப் பட்டன. அதை வாங்குவதற்கான படிவங்களும் கூகிள் Docs மூலம்  பிற நண்பர்களுக்கு வாட்ஸ்ஏப் குறுஞ்செய்தியாக வந்துசேர்ந்தது.
இன்னொரு நண்பர் மூன்று தர்பூசணிகளை கொள்முதல் செய்ய விரும்பினார். இந்த பரிவர்த்தனை அனைத்தும் இணைய வாயிலாகவே முடிந்து விட்டது. அட, உணவு விநியோக சங்கிலியில் கார்பன் காலடிகள் எப்படிக் குறைக்கப்பட்டுவிடுகின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!

பிறகுதான் தெரிந்து கொண்டேன்: அந்தத் தர்ப்பூசணிகள் கிராமத்து தோட்டத்திலிருந்து முதலில் ஒரு டிரக்கில் சென்னை வந்து இறங்குகின்றன. பிறகு விவசாய-நண்பரின் காரில் 3 தர்பூசணிகள் மட்டும் அலுவலகம் புறப்பட்டுப் போயின. அப்புறமாக வாங்கிய நண்பரின் காரில் ஏறிக்கொண்டு விட்டன. மொத்தமாக தர்பூசணிகள் 150 கிலோமீட்டர்கள் பயணித்துவிட்டிருக்கின்றன. அதே கிராமத்திலுள்ள வேறொரு விவசாயியின் (ஆயுட்கால விவசாயி) தோட்டத்து தர்பூசணிகள் எவ்வளவு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியிருந்திருக்கும்? இவையிரண்டில் எந்த தர்பூசணியின் கார்பன் காலடிகள் குறைவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

தர்பூசணி சாப்பிடும் தேவையைக் குறைத்தாவது தெய்வ அல்லது பூசாரித்தன்மை பெற்றே விடுவது என்று முடிவு செய்துவிட்டேன்!

Tuesday, February 9, 2016

கூரை ஓவியம்


இங்கிலாந்தில் இருந்த ஒரு பேராரசிரியர், பணி முடித்து வீடு திரும்பும்போது சாலையோரத்திலுள்ள மின்கம்பங்கள் ஒன்றுவிடாமல் குடையால் தட்டிக் கொண்டே செல்வாராம். ஏதாவது ஒரு கம்பம் விடுபட்டுவிட்டால், திரும்பவும் வந்து தட்டிவிட்டுதான் வீடு செல்வராம். இது obsessive compulsive disorder எனும் மனப்பித்து. பெரிய மேதைக்குள்ளும் இப்படி ஒரு பித்து இருக்கத்தானே இருக்கும்!

விருந்துகளின் கரண்டி, முள்கரண்டி திருடுபவர்கள் உண்டு. Fight Club படம் பார்த்ததுண்டா? அதில் பிளவுபட்ட மனஆளுமைகள் (split personality) என்ற மனோவியாதியை சிறப்பாக கையாண்டிருப்பார்கள்.

இப்படி தனித்துவமான குணாதிசயம் கொண்ட மக்கள் நம் நினைவில் நிறுத்துவது ஒருவகையில் நம் மனநலத்துக்கு நல்லதுதான். பழனியில் பாலிடெக்னிக் படித்துக்கும் போது மூத்த மாணவர் ஒருவர். இயந்திரம் போன்ற உடலும் குரலும் கொண்டவர். மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்த எங்களை ரேக்கிங் என்ற பெயரில் புதுசு புதுசாக சோதிப்பார்.

முதல்முறை அவரிடம் நான் மாட்டிக்கொண்டது இப்படிதான். அறைக்கு வந்தார்.. எங்களைப் பார்த்து அலட்சியப் புன்னகை உதிர்த்துவிட்டு, இயந்திரக்குரலில் 'டே.. டூத்பேஸ்ட் இருக்கா?' என்றார். அப்பாடா வெறும் பற்பசையோடு சிக்கல் தீர்ந்தது என்று புதிதாக வாங்கிய கோல்கெட் பற்பசையை எடுத்து பவ்யமாக நீட்டினேன். பாவம், மூத்தவர் சாயுங்காலத்தில் பல்துலக்கும் ஒழுக்கங்கள் கொண்டவர் போல - என்ன சொந்தமாக வாங்கிக் கொள்ளத் தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டேன்.

பற்பசையைக் கையில் பெற்றுக் கொண்ட அவர் அடுத்து கேட்டது: 'டே.. தீப்பெட்டி இருக்கா?' பற்பசைக்கும் தீப்பெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. அறை நண்பன், ஒரு தீப்பெட்டி எடுத்து நீட்டினான்.

'அண்ணா, கரண்ட் போயிடுச்சுன்னா, மெழுகுவர்த்தி ஏத்தறதுக்காக வச்சிருந்தேணுங்ணா' என்று பவ்யமாக நீட்டினான்.

ஹேஹே என்று சிரித்தவாறே,..

'டே அந்த டேபிளை எடுத்து கட்டில் மேலே போடுங்கடா' என்றார். இப்போது எங்களுக்கே கொஞ்சம் ஆர்வம் லேசாக தொற்றிக் கொண்டது போலிருந்தது. அண்ணன் ஏதோ வேடிக்கை செய்து காட்டப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு மேஜையை கட்டிலுக்கு ஏற்றினோம். கையில் பற்பசையும் தீப்பெட்டியுமாக இயந்திர மனிதர் மேஜையின் மீதேறினார். அறையின் மேற்கூரை இப்போது அவர் கைக்கெட்டும் தூரம். பற்பசையை பிதுக்கி கூரையில் நான்கைந்து பொட்டுகள் போல வைத்தார். நாங்கள் எல்லோரும் கீழிருந்து கூரையையேப் பார்த்துக் கொண்டிருந்தோம். அநேகமாக அனைவரது வாயும் பிளந்தபடி இருந்திருக்கும் என்று இப்போது கற்பனை செய்து கொள்கிறேன்.

பிறகு ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் ஒரு தீக்குச்சி என சொருகினார். தீக்குச்சியின் மருந்துப் பகுதி கீழ் நோக்கியிருந்தது.
இப்போது, மற்றொரு தீக்குச்சியைப் பற்றினார். தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த தீக்குச்சிகள் ஒவ்வொன்றாகப் பற்றவைத்தார். தீ மேல் நோக்கி எரிந்து ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் கரிப்படலமாய் படர்ந்தது.
கீழிலிருந்து பார்க்கும் போது கூரையில் ஓட்டை விழுந்தது போன்ற கரும்பொட்டுகளாக இருந்தன.

அண்ணனார்  மேஜையிலிருந்து குதித்து இறங்கினார். நாங்கள் அவரையே ஒன்றும் புரியமால் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த விஞ்ஞான செய்முறைக்கு ஏதாவது விளக்கம் கொடுப்பாரோ என்று அனைவரும் அமைதி காத்தோம். ஆனால் அண்ணன் எதுவும் சொல்லாமல் அலங்கார விளக்குகள் அமைத்துமுடித்துவிட்டு பார்வையிடுபவர் போல மேற்கூரையை பார்த்துக் கொண்டார். திருப்திகரமாக முடிந்தது என்பது போன்ற புன்னகையுடன் எங்களைப் பார்த்தார். விளக்கம் ஏதும் கொடுக்காமல், பற்பசையையும் தீப்பெட்டியையும் மட்டும் கொடுத்துவிட்டு அண்ணன் அறையைவிட்டுச் சென்றார்.

நாங்கள் திருதிருவென்று கருகருவென்றிருந்த மேறகூரைப் பொட்டுக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
திடீரென்று ஒரு இயந்திரக் குரல்.. அண்ணன்தான்.

'என்னங்கடா மேலேயேப் பார்த்துக்கிட்டிருக்கீங்க? பேஸ்ட் வேஸ்டா போச்சுன்னு வருத்தமா இருக்காடா?'
'........'
'பேசாம பேஸ்ட்டை மேல போயி எடுத்து பல்லு விளக்கிடுங்கடா...'
உபரியாக ஹேஹ்ஹேஹே என்ற அதிரும் இயந்திரச் சிரிப்பையும் உதிர்த்து விட்டுச் சென்றார். எல்லா அகல நீளங்களில் யோசித்தாலும் அந்த அண்ணனின் கூரை ஓவிய விந்தை இன்னும் பிடிபட மாட்டேங்கிறது.

Wednesday, February 3, 2016

நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்


மனைவி அடிக்கடி எனக்கு நினைவூட்டும் வாக்கியம். நடுவில் மின்கம்பம் எப்பவும் ஞாபகம் இருக்கட்டும்! அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்தானே? அதில் அம்பியை அல்லேக்காக இரண்டு ஆட்டோக்களில் வந்து ஹைஜாக் செய்து அப்படியே கொண்டுபோய் ஒரு மின்கம்பத்தில் சாத்துவார்களே நினைவிருக்கிறதா? டொய்ங்ங்ங்-ன்னு ஒரு சத்தம் கூட கேட்கும். அப்புறம் சாக்கில் தொங்கப் போட்டு ரூல்ஸ் ராமானுத்தை பேட்பாய்ஸ் குமுறுகுமுறென்று குமுறுவார்கள். சாக்கிலிருந்து சன்னமாக தக்காளி சாஸ் வரும்வரைக்கும் குமுறுவார்கள்.

இந்த மொத்த ஸீனும் எனக்கு அப்பப்ப நினைவுக்கு வரவைப்பதற்கான மந்திரம்தான் - மனைவி சொல்லும் நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்.
சரி, எனக்கும் அம்பியாகிய ரூல்ஸ் ராமானுஜத்திற்கும் என்ன சம்பந்தம்? தயவுசெய்து படியுங்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கக்கூடும்:

1: வீட்டு குடிநீர் தேவைக்காக தலைகீழ் சவ்வூடுபரவல் தானியங்கி வடிகட்டி வாங்கினேன். அதாவது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் (RO Water Purifier) என்பதையே தமிழில் சொல்லுகிறேன் (இப்போது உங்களுக்கு கூட என்னை சாக்குக்குள் தொங்கப் போடலாம் என்று தோணும் - தப்பில்லை)

2: இந்தியாவிலேயே ஏன் இந்த ஆசியாவிலேயே நம்பர் ஒன் என்று சொல்லக் கூடிய பிராண்டாக பார்த்து வாங்கினேன். பதினாறாயிரம் ரூபாய் விலை கொடுத்து. அதுவும் நல்ல வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் ஒரு குட்டி வெள்ளை பாண்டா கரடி மரத்தை கவ்வியிருப்பது போல சமையலறையின் சுவரில் பொருந்திக் கொண்டது.

3: சென்னை நிலத்தடி நீரை அதன்மூலம் பரிசுத்தமானதாக்கி குடும்பம் மொத்தமும் அருந்தி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம் சில வருடங்கள். நானும் ஆர்ஓ தண்ணீர் குடித்து நல்ல அம்பியாகவே இருந்து வந்தேன்.

4: ஆனால் பாருங்கள் திடீரென்று ஒருநாள் அது உங்களுக்கு உழைத்தது போதும் என்பது போல் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டுவிட்டது. எங்களுக்கெல்லாம் நீர் ஆதாரமாக இருந்த அந்த வெண்ணிறப் பெட்டி இப்படியானது எங்கள் அனைவருக்கும் பெரு வருத்தமே.

5: பெட்டியை பழுது நீக்கும் பொருட்டு கம்பெனியிடம் பேசினோம். அடுத்த நாளே ஒரு தேர்ந்த வல்லுநர் வீட்டுக்கு வந்தார். பாவம் வந்தவருக்கு குடிக்க நீர் கூட பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டியிலிருந்து பெறமுடியவில்லை. 30 ரூபாய் கொடுத்து வாங்கிய பாட்டில் நீரையே மொண்டு கொடுத்தோம். குடித்துமுடித்து வாயைத்துடைத்து விட்டு வல்லுநர் பெட்டியை ஆய்வு புரிந்தார்

5.1: அவரது ஆய்வறிக்கை​யைக் கேட்டபின் எங்களுக்கே இயக்கம் நின்று விட்டது போலிருந்தது - ஏனென்றால் ஆர்ஓ பெட்டியின் 80% பாகங்கள் பழுதுதாகி பயனற்றதாகிவிட்டதாம்.

5.2: இந்த கரடியை நீங்கள் காப்பாற்றுவதற்கு பதில் புதுசே வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்துவிட்டு கிளம்பினார் கம்பெனியின் வல்லுநர்.

6: ஆறு மனமே ஆறு என்று கூறிக்கொண்டாலும் எங்களுக்கு நீருக்கு தினமும் 100 ரூபாய் மாதிரி செலவாகிக்கொண்டிருந்தது - கூடவே நீர் கேன்களின் தரம் கேள்விக்குறியதாக இருந்தது. மனைவி ஒருசமயம் கேன் நீருக்குள் சமர்த்தாக நீந்திக் கொண்டிருந்த சில க்க்குட்டிப்புழுக்களை மொபைல் காமிராவில் படமாக்கினார். அவர் இந்த கோணத்தில் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் டிஸ்கவரி அல்லது நேட்ஜியோ போன்ற ஏதாவது சேனலில் பணியமர்த்தப்பட்டிருக்க கூடும்.

7: இங்கேதான்.. அம்பி அந்நியனாக எழுந்தேன் என்று தெரிந்து கொள்க..! ஏன் பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டி ஏன் பொசுக்கென்று நின்றுபோனது? ஏன் ஒரு சின்ன அலாரம் கூட அது கொடுக்கவில்லை? நாங்கள் பயன்படுத்திய விதம் தவறா அல்லது பெட்டி தயாரிக்கப்பட்ட விதம் தவறா? போன்ற பல பல கேள்விகள் என்னைச் சுற்றின.

8: அந்நியனாக ஆவதைவிட ரூல்ஸ் ராமானுஜமாக மாறுவதே உசிதமாகப் பட்டது எனக்கு (உசிதமணி.. உசிதமணீ) கம்பெனி பெற்ற தரச்சான்றிதழ்கள், குடிநீருக்கான அரசு நிர்ணயிக்கும் தரக்கட்டுப்பாட்டுகள், ஆர்ஓ பெட்டிக்கு கம்பெனி அளித்திருந்த உத்திரவாதம், பெட்டி இயங்கும்முறை, நான் வாங்கிய பெட்டி பழுதான விதம் இவைகளை அலசி காயப்போட்டு இஸ்திரியும் போட்டு ஒரு ஈமெயிலை கம்பெனிக்கு அனுப்பினேன்.

9: சில நாட்களிலேயே ஒரு மண்டல மேலாளர் தொடர்பு கொண்டார்.. நான் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதான் கோளாறு என்பதில் ராமானுஜமாக நின்றேன். நாட்கள் கழித்து வேறொரு மேலாளர் பேசினார்.. அதையே சொன்னேன்.. கூடவே கோளாறு உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதால் எழும் ஆபத்துகளையும் விளக்கினேன் அவருக்கு. அப்படியே அதை ஈமெயிலாக்கியும் அனுப்பினேன்.

10: இன்னும் சில நாட்களில் வேறொரு மேலாளர் பேசினார்.. அம்பி உங்களுக்கு இழப்பீடாக புது ஆர்ஓ பெட்டியே வழங்குகிறோம் என்றார். அதுவும் வந்தது புது பாண்டா கரடி போல சமையலறையில் அதே இடத்தில் ஒட்டிக் கொண்டது. பதினாறாயிரம் மிச்சப்பட்டது அப்புறம் நீர் கேனுக்குள் நெளியும் புழுக்களை படமெடுப்பதிலிருந்து விடுபட்டது போன்றவை மனைவிக்கு ஆறுதலாய் இருந்தாலும் - என்மேல் ஒரு பயம் வந்துவிட்டிருந்தது போல.

11: இதுபோன்று ஏதாவது தரக்குறைப்பாடுகள் சொன்னாலோ தென்பட்டாலோ உடனடியாக செயலூக்கம் பெற்றவனாகி ஈமெயில் புகார்களை சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்புகிறவனாகிவிட்டேன்.

12: இது அப்படியே தொடர்ந்தது - கடையில் வாங்கிய சப்பாத்தி மாவில் இருந்த மண்துகளுக்காக, வீடு பக்கத்தில் கழிவு கொட்டும் வீட்டுக்காரருக்காக, குப்பை எரித்துவிட்டுப் போகும் கார்ப்ரேக்ஷன் ஊழியருக்காக, கட்டணம் வசூலிக்கும் சாலையின் குழிகளுக்காக, குறித்த இடத்திற்கு வந்து கூட்டிச்செல்லாத வாடகைக் காருக்காக என ஈமெயில் அனுப்பிக் கொண்டேயிருந்தேன். பாருங்கள், ரூல்ஸ் ராமானுஜம் என்னுள் முழுதாக இறங்கிவிட்டிருந்தான் போலிருக்கிறது!

என்னைக் கட்டுப்படுத்தும் விதமாக மனைவி இந்த நடுவில் மின்கம்பம் இரண்டு ஆட்டோக்கள் சொன்னாலும் ஈமெயில்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன (ஒரு பயத்தோடுதான்). என்னைப் போல் இன்னும் நிறையபேர் இருப்பார்கள். தரத்தை வேண்டுகிற, குறைகளை களைய முயற்சிக்கிற அம்பிகள் எங்கும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வலுவான மின்கம்பங்கள் நின்றாலும் ராமானுஜர்கள் தேவை நமக்கு அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது, அல்லவா?

Tuesday, February 2, 2016

அந்தப் பறவை எந்த தேசம்?


பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஒரு குறு ஆச்சரியம் எனக்கு. சதுப்புநிலத்தை இரண்டாக பிரித்துக்கொண்டு ஓடும் பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை. சாலையின் ஒருபக்கம் உள்ளூர் போட்ட குப்பை மலை. மறுபக்கம் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம். சாலையால் சதுப்புநிலத்தின் மறுப்பக்கம் காப்பாற்றப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

சென்னை வந்ததிலிருந்து இவ்வழியாகத்தான் அலுவலகம் போய் வருகிறேன். ஆக்ஸிலேட்டரை மட்டுப்படுத்துமாறு பறவைக்கூட்டம் ஆர்ப்பரிக்கும். அதிகம் பார்த்தறியாத வெளிநாட்டுப் பறவைகள். பருவத்துக்கென ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கின்றன. சீக்கிரம் போ இந்தக் கோடைக்குள் சென்னை சேரணும் என்ற திட்டமாக ஏதோவொரு குளிர்தேசத்திலிருந்து கூட்டமாய் வருகின்றன - போகின்றன.

தலைமுறைகளுக்கு தன் பயணக்குறிப்புகளை கடத்தி ஒரு மரபணு பதிவாக ஆகிறது இந்நிலம்!

ஒரு நல்ல சாயுங்காலத்தில் வீடு திரும்பும் போது காணக்கிடைத்தக் காட்சி - குறைந்தது 400 அல்லது அதற்குமேலாக வாட்டசாட்டடமான பறவைகள் நிரையாக சதுப்புநிலத்தின் மேல் நட்டுவைத்திருந்த டிரான்ஸ்பார்மர் கம்பியில் அமர்ந்திருந்தன. நல்ல கனமான மின் கம்பிதான் இருந்தாலும் அத்தனை பறவைகளும் ஒருசேர எழுந்தால் அதன் அதிர்வில் கம்பியே அறுந்துபோய்விடும் போலிருந்தது.

அந்த பறவைகளின் திரள், அதுகாட்டும் பிரம்மாண்டம், ஒருமித்தம் இயற்கையின் பேரியக்கமாக தோன்றியது அன்று. ஒரு பேராற்றலை தாங்கிக் கொண்டு அமைதியாக தவமிருப்பது போல பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன.

சாலையின் மறுப்பக்க குப்பைமலை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேபோகிறது. மலை சரிந்து சரிந்து தூரமாக தெரிந்தது இப்போது சாலையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. குப்பையில் சதுப்புநிலம் உறிஞ்சியது போக எஞ்சி நிற்கும் பிளாஸ்டிக் மட்டுமே மலையாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நகரும்-பிளாஸ்டிக்-மலையும் கூட இன்னொரு பிரம்மாண்டம்தான். பிளாஸ்டிக் குப்பை பெருக பெருக குளிர்தேசப் பறவைகள் வரத்து குறைந்து போய்கொண்டேயிருக்கிறது.

என்றோ எங்கோ எவரோ வீசிய சின்ன பாலிதீன் பை எவ்வளவோ தூரத்தில் இருந்து பெரும்பிரயாணம் செய்து வரும் பறவை நிற்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்கொண்டேயும் இருக்கிறது. பள்ளிக்கரணையை தென்சென்னையின் சிறுநீரகம் என்று சொல்கிறார்கள். தரைமட்டத்திற்கு கீழ் கடல்நீரை புகவிடாமல் ஒரு தடுப்பு அரணாக நிற்பதால். ஒரு நிலம் தன் மேற்பகுதியில் கோடி உயிர்களின் சரணலாயமாக இருக்கிறது; கீழே ஒரு ஊருக்கே அரணாகவும் இருக்கிறது.